கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 79வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் திங்களன்று நடக்கிறது.
கடந்த நவம்பர் 6, 2019 அன்று ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தியது தான் இது வரை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கடைசி வெற்றியாகும். தன்னுடைய கடந்த ஆட்டத்தில், கோச் ராபர்ட் ஜர்னி தலைமையிலான நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியுடன் மோதியது. இதில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம்.
இது வரை நான்கு டிராக்களையும், ஆறு தோல்விகளையும் சந்தித்துள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தன்னுடைய கடைசி கோலை ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்தது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய அணியின் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை தராமல் இருப்பது ஜர்னிக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் தான்.
ISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி!
"என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. புதிதாக அணியில் சேர்ந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் இன்னும் நமது சூழ்நிலைக்கு பழகவில்லை. அதற்கு சில மாதங்களாகும். இருந்தாலும், நாங்கள் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம்," என்கிறார் ஜர்னி.
ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. இரியாண்டோ தனது அணியினரிடம் இருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்நோக்கி உள்ளார். செர்ஜியோ காஸ்டல், நோவ் அகோஸ்டா மற்றும் காயம்பட்ட பின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள பிடி ஆகியோர் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு உதவுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதோடு, இளம் ஆட்டக்காரர்களான நரேந்தர் கெலோட், ஜிதேந்தர் சிங், சன்டிப் மன்டி ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
"இந்த தடவை எங்களின் இளம் வீரர்கள் சோபிக்கவில்லை என்றாலும், அடுத்த வருடம் கட்டாயமாக தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். நாளைய ஆட்டத்தை பொருத்தவரை, வெற்றியை நோக்கி நாங்கள் களமிறங்குவோம்," என்கிறார் இரியாண்டோ.
Photos Courtesy : ISL Media