கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தன.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 79வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தத்தமது வீரர்களிடம் இருந்து இன்னும் சிறப்பான பங்களிப்பை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்றைய ஆட்டம் நடந்தது.
டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தை ஆரம்பித்தது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியின் கல்லேகோ ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
மகிழ்ச்சியில் இருந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கும் வகையில், அந்த அணியின் மிஸ்லாவ் கொமோர்ஸ்கிக்கு காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவருக்கு பதில் வாஸ் 19வது நிமிடத்தில் களமிறக்கப் பட்டார்.
பின்னர், முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் ஒரு நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜாம்ஷெட்பூர் அணியின் டேவிட் கிராண்டே ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 46வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியும், ஜாம்ஷெட்பூர் எஃப்சியும் தங்களது அணிகளில் மாற்றங்களை செய்தன. 55வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டின் ஹீரிங்ஸுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. 67வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் ஃபரூக் சௌத்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
எழுபத்தி ஐந்தாவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி கடைசி முறையாக ஒரு மாற்றத்தை செய்தது. 76வது நிமிடம் அந்த அணியின் அகோஸ்டாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த சில ஆட்டங்களை போல இன்றைய ஆட்டமும் சமனில் முடிந்து விடுமோ என பார்வையாளர்கள் ஐயமுற்றிருந்த வேளையில், 77வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணியின் ரெடீம் ஒரு கோலை அடித்து தனது அணியின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.
ஆனால், நார்த் ஈஸ்ட் அணியினரின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நாங்கள் ஒன்றும் உங்களை விட சளைத்தவர்கள் இல்லை என சொல்லும் விதமாக ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டா 82வது நிமிடத்திலும், மெமோ 85வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து, தங்களது அணியின் கொடியை உயரே பறக்க விட்டனர்.
87 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சி அணியின் அபுய்யாவுக்கு முதல் முறையாகவும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் ஃபரூக்குக்கு இரண்டாம் முறையாகவும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது.
மாற்றம் ஏற்றத்தை கொண்டு வந்தது என்பது போல 88வது நிமிடத்தில் அந்த அணியின் ஜோஸ் லீய்டோ ஒரு கோல் அடித்து ஜாம்ஷெட்பூரை சமன் செய்தார். 90வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் எஃப்சியின் சாவேசுக்கும் லீய்டோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நான்கு நிமிடங்கள் கூடுதல் அளிக்கப்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர் அணியின் சந்திப்புக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நார்த் ஈஸ்ட் எஃப்சியின் கல்லேகோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவுக்கு வந்தது.