புபனேஸ்வர் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிசா எஃப்சி மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 82வது நாள் ஆட்டம் புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 21 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் உள்ள ஒடிசா எஃப்சி, 15 ஆட்டங்களில் 13 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
தன்னுடைய கடந்த ஆட்டத்தில் ஏடிகே எஃப்சியிடம் தோல்வியை தழுவிய ஒடிசா எஃப்சி, இந்தப் போட்டியில் வெற்றியை ருசித்து விட மும்முரமாக உள்ளது. அது மட்டுமில்லாது, புபனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் ஜனவரி கடைசி வாரம் வரை தான் பங்கு கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒடிசா எஃப்சி, ஜனவரி 29 அன்று தன் சொந்த மண்ணில் எஃப்சி கோவாவுக்கு எதிரே நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக மண்ணை கவ்வியது.
எனவே, அடிபட்ட சிங்கமாய் வெகுண்டு எழும் என்பதில் ஐயமில்லை. நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியோ, தனது கடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக ஆடி 3-3 என்ற கோல் கணக்கில் சமன் செய்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் எஃப்சியை விட ஒரு படியே மேலே உள்ளது. அதற்கு முந்தைய ஆட்டங்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே, கடைசி அணிகளில் ஒன்று என்ற பட்டத்தை தவிர்க்க அது தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
தன்னுடைய அணியின் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை தராமல் இருப்பது நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியின் இடைக்கால கோச் காலித் ஜமீலுக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் தான். எனினும், ராபர்ட் ஜர்னி வெளியேறிய பிறகு கோச் பொறுப்பை ஏற்றுள்ள அவர் நம்பிக்கையோடு இருக்கிறார்.
"எங்களின் மொத்த சக்தியையும், திறமையையும் காட்ட வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். ஜர்னி காட்டிய வழியில் சிறிது மாற்றங்களை செய்து நாங்கள் விளையாடுவோம்," என்கிறார்.
ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தி தெரிஞ்சுருக்கணும்.. கிரிக்கெட் வர்ணனையில் இந்தி திணிப்பு.. அதிர்ச்சி!
நிகில் கடாம் மற்றும் மிஸ்லாவ் கோமோர்ஸ்கி ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில், லாலங்க்மாவியா சொந்த காரணங்களுக்காக அணியில் இல்லை. ஆனால், கல்லேகோ மற்றும் ரெடீம் டிலாங் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஒடிசா எஃப்சி அணியின் ஜோஸப் கொம்பாவும் வெற்றிக் கனியை அடையும் நம்பிக்கையில் இருக்கிறார். அரிடென் சண்டானா காயத்தின் காரணமாக வெளியேறிய பிறகு, ஒடிசா அணி பெங்களூரு எஃப்சி அணியிடம் இருந்து மானுவல் ஒன்வுவை கடனாக பெற்றது. அவரும் ஒடிசா அணியை ஏமாற்றாமல் எஃப்சி கோவா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்தார். இடைநீக்கத்திற்கு பிறகு அணிக்கு திரும்பிய ஷுபம் சாரங்கி கொம்பாவுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
கொம்பாவ் கூறுகையில், "வரும் இரண்டு ஆட்டங்களும் எங்களுக்கு மிகவும் முககியமானவையாகும். இந்த சீசனில் ஒவ்வொரு ஆட்டத்தையும் நாங்கள் பார்த்து பார்த்து விளையாடினோம். இந்தப் போட்டியில் இன்னும் கூடுதல் கவனத்துடன் களத்தில் நிற்போம். நான்காம் இடத்துக்கு முன்னேறுவது தான் எங்கள் குறிக்கோள். இறுதி ஆட்டத்திற்கு பயிற்சி எடுப்பது போல எங்களை தயார் செய்து வருகிறோம்," என்கிறார்.
Photos Courtesy : ISL Media