சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம், சென்னையின் எஃப்சி மற்றும் எஃப்சி கோவா அணிகள் இடையே நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி, எஃப்சி கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 39 புள்ளிகள் எடுத்து அசைக்க முடியாத முதல் இடத்தில் இருந்த எஃப்சி கோவா அணி, 18 போட்டிகளில் 29 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருந்த சென்னையின் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது.
மார்ச் 14 அன்று கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இறுதி போட்டிக்கு செல்வது யார் என்று முடிவு செய்வதில் பெரும் பங்காற்றப் போகும் போட்டி என்பதால், இரு அணிகளின் மீதும் எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருந்தது.
அதுவும், போட்டி தனது சொந்த ஊரில் நடப்பதாலும், எதிரில் விளையாடப் போவது பலம் கொண்ட எஃப்சி கோவா என்பதாலும், ஓவன் கொய்லி தலைமையிலான சென்னையின் எஃப்சி வீரர்கள் மீது அழுத்தம் சற்று அதிகமாகவே இருந்தது என கூறலாம்.
சென்னையின் எஃப்சி அணி, ஓவன் கொய்லியின் வருகைக்கு பின் லீக் ஆட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்திருந்தாலும், கடந்த செவ்வாயன்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஒன்பதாம் இடத்தில் இருந்த அந்த அணியை வெல்ல முடியாமல் 2-2 என்ற கோல் கணக்கில் மேட்சை சமன் செய்தது.
இந்த சீசனின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்த எஃப்சி கோவா, இந்த ஆட்டத்திலும் வென்று இறுதி போட்டியை நோக்கி முன்னேற மும்முரமாக இருந்தது.
அதுவும், தன்னுடைய கடைசி லீக் மேட்சில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல், தான் மட்டும் 5 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றது அந்த அணிக்கு மிகவும் தெம்பளித்தது.
ஏஎஃப்எல் சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய அணி என்ற பெருமையை பெற்றுள்ள கோவா எஃப்சி, தன்னுடைய வெற்றி பயணத்தை தக்க வைத்து கொள்ள தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் கடும் முயற்சி செய்த போதும் முதல் பாதி முடியும் வரை யாராலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், 50வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் ஜெர்ரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சியின் கோயன், ஒரு கோல் அடித்து தனது அணியின் கணக்கை தொடங்கினார். 57வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் ஃபாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையே சென்னையின் எஃப்சி அணியின் தாபா, 61வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். 63வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் கோரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட நிலையில், 65வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது.
66வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் வன்ஸ்பாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 69வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. பின்னர் 71வது நிமிடத்தில் இன்னொரு மாற்றத்தை செய்தது. சென்னையின் எஃப்சி அணியின் எலி சபியா, 77வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அடுத்த இரு நிமிடங்களில் அந்த அணியின் சங்டே ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை நான்காக்கி அசைக்க முடியாத இடத்தில் நிறுத்தினார். 79வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணி ஒரு மாற்றத்தை செய்தது.
லீக் ஆட்டங்களில் முதலிடம் பிடித்த எஃப்சி கோவா அணி இந்த மேட்சில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போய்விடுமோ என்று பலரும் நினைத்த நிலையில், அந்த அணியின் சேவியர் 85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து மானத்தைக் காப்பாற்றினார்.
90வது நிமிடத்தில் 3 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. சென்னையின் எஃப்சி அணியின் கிரிவெல்லாரோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.