பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றின் இரண்டாம் ஆட்டம், பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே எஃப்சி அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது.
ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கன்டிராவா மைதானத்தில் நடக்கிறது.
லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 34 புள்ளிகள் எடுத்து வலுவான இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி அணி, 18 போட்டிகளில் 30 புள்ளிகள் எடுத்து அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
மார்ச் 14 அன்று கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் ஐஎஸ்எல் இறுதி போட்டிக்கு செல்வது யார் என்று முடிவு செய்வதில் பெரும் பங்காற்றப் போகும் போட்டி இது என்பதால், இரு அணிகளின் மீதும் எதிர்பார்ப்பும் அழுத்தமும் உள்ளது.
ஏடிகே எஃப்சி அணி பலமாக இருக்கும் நிலையில், பெங்களூரு எஃப்சி வீரர்கள் மற்றும் கோச் கார்லெஸ் குட்ராட் மீது அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பெங்களூரு எஃப்சி, கடைசி சில லீக் ஆட்டங்களில் ஏனோ சொதப்பியது. அதுவும், தன்னுடைய கடந்த மேட்சை இதே ஏடிகே எஃப்சிக்கு எதிராக விளையாடி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்ததால், அரையிறுதியில் எப்படியாவது அந்த அணியை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக உள்ளது. ஏஎஃப்சி கோப்பைக்கான தகுதி சுற்றில் மாலத்தீவு அணியிடம் சமீபத்தில் பெங்களூரு எஃப்சி தோற்றதும் நினைவிருக்கலாம்.
ஆத்தாடி.. இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. பின்னாடி அடிச்சு பவுண்டரியைப் பிடிச்ச ஷபாலி!
இடைநீக்கத்துக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள சுனில் சேத்ரியும், ஜுவனானும் பெங்களூரு எஃப்சிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். எரிக் பார்த்தலுவும் அணிக்கு வலு சேர்க்கிறார். இவர்களின் துணையுடன் இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் குட்ராட் இருக்கிறார்.
"கால்பந்து ஆட்டத்தில் எப்போதுமே பிரஷர் இருக்கத் தான் செய்யும். ஏஎஃப்சி போட்டியில் நாங்கள் தோற்றது எங்களுக்கு ஏமாற்றம் தான் என்ற போதிலும் இன்னும் சிறப்பாக விளையாட உறுதி பூண்டுள்ளோம். கன்டிராவா மைதானத்தில் நாங்கள் வெற்றிகளை சுவைத்துள்ள போதும், அங்கே பல சவால்களையும் சந்தித்து இருக்கிறோம். எங்கள் வீரர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அவர்கள் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இறுதி போட்டியில் இடம் பிடித்து கோப்பையை வெல்வதே எங்கள் லட்சியம்," என்கிறார் குட்ராட்.
ஏடிகே எஃப்சியின் நிலைமையும் கிட்டத்தட்ட பெங்களூரு எஃப்சியைப் போலத் தான். தன்னுடைய கடந்த மேட்சை பெங்களூரு எஃப்சிக்கு எதிராக விளையாடி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்ததால், தன் திறமையை நிரூபித்து இறுதி சுற்றுக்கு முன்னேற ஆர்வமாக உள்ளது.
ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, பெங்களூரு எஃப்சியை தோற்கடிக்க மொத்த பலத்துடன் களமிறங்கும். காயம் ஏற்பட்ட பின் திரும்பிய டேவிட் வில்லியம்ஸ், நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள ராய் கிருஷ்ணா, ஜேவியர் ஹெர்னான்டஸ் மற்றும் சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டிருக்கும் எடு கார்சியா ஆகியோர் அணியில் உள்ளது ஹபாசுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பிரபிர் தாஸ் மற்றும் மைக்கேல் சூசைராஜ் ஆகியோரும் ஏடிகே அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
ஹபாஸ் கூறுகையில், "பெங்களூரு எஃப்சி ஒரு திறமையான அணி. எனவே, நாளை நாங்கள் எங்களின் 100 சதவீத உழைப்பை அளிக்க வேண்டும். கடந்த சீசனின் சாம்பியன் அவர்கள் என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். அவர்களை மதிக்கிறோம். இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கிறேன்," என்கிறார்.
மேலும் அவர், "இரு அணிகளுமே (பெங்களூரு எஃப்சி, ஏடிகே எஃப்சி) பலம் வாய்ந்த, திறமையான அணிகள். எனவே முந்தைய ஆட்டங்களின் தொடர்ச்சியாக இந்த ஆட்டம் இல்லாமல், புதிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. சவாலுக்கு நாங்கள் தயராகவே இருக்கிறோம் என்கிறார்."