சென்னை : ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம், சென்னையின் எஃப்சி மற்றும் கோவா எஃப்சி அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது.
ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக்கின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப் போகும் இந்த போட்டி, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 39 புள்ளிகள் எடுத்து அசைக்க முடியாத முதல் இடத்தில் இருக்கும் எஃப்சி கோவா அணி, 18 போட்டிகளில் 29 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருக்கும் சென்னையின் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
குறிச்சு வைச்சுக்கோங்க.. இந்தியா - பாக். போட்டி இங்கே நடக்கும்.. அதிர விட்ட கங்குலி.. ஷாக் ஆன பாக்.!
மார்ச் 14 அன்று கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இறுதி போட்டிக்கு செல்வது யார் என்று முடிவு செய்வதில் பெரும் பங்காற்றப் போகும் போட்டியாக இது நடைபெற உள்ளதால், இரு அணிகளின் மீதும் எதிர்பார்ப்பும் அழுத்தமும் உள்ளது.
அதுவும், போட்டி தனது சொந்த ஊரில் நடப்பதாலும், எதிரில் விளையாடப் போவது பலம் கொண்ட எஃப்சி கோவா என்பதாலும், ஒவன் கொய்லி தலைமையிலான சென்னையின் எஃப்சி வீரர்கள் மீது அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது என கூறலாம்.
சென்னையின் எஃப்சி அணி, ஓவன் கொய்லியின் வருகைக்கு பின் லீக் ஆட்டங்களில் தொடர் வெற்றிகளை குவித்திருந்தாலும், கடந்த செவ்வாயன்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஒன்பதாம் இடத்தில் இருந்த அந்த அணியை வெல்ல முடியாமல் 2-2 என்ற கோல் கணக்கில் மேட்சை சமன் செய்தது.
நெரிஜுஸ் வல்க்ஸிஸ், ரஃபேல் கிரிவெல்லாரோ, எட்வின் வன்ஸ்பால், லல்லியான்ஜுயாலா சங்க்டே, எலி சபியா மற்றும் லூசியன் கோயன் ஆகிய வீரர்கள் இந்த சீசனில் சென்னையின் எஃப்சியின் நம்பிக்கை நாயகர்கள். அனிருத் தாபாவும், ஜெர்மன்பிரீத் சிங்கும் கூட அணிக்கு வலிமை சேர்ப்பவர்கள் தான்.
கொய்லி கூறுகையில், "எஃப்சி கோவா ஒரு மிகச் சிறந்த அணி. அவர்கள் முதலிடத்தில் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அதே சமயம் நாங்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறோம். வீரர்களுக்கிடையே இருக்கும் நம்பிக்கையும் உறுதியும் எஃப்சி கோவாவுக்கு எதிரான போட்டியில் எங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் என நம்புகிறேன். முதலிடத்தில் உள்ள அணியை எதிர்கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்," என்கிறார்.
இந்த சீசனின் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்த எஃப்சி கோவா, இந்த ஆட்டத்திலும் வென்று இறுதி போட்டியை நோக்கி முன்னேற மும்முரமாக உள்ளது. அதுவும், தன்னுடைய கடைசி லீக் மேட்சில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல், தான் மட்டும் 5 கோல்கள் அடித்து அபார வெற்றி பெற்றது அந்த அணிக்கு மிகவும் தெம்பளிக்கிறது.
ஏஎஃப்எல் சாம்பியன்ஸ் லீக்கில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய அணி என்ற பெருமையை பெற்றுள்ள கோவா எஃப்சி, தன்னுடைய வெற்றி பயணத்தை தக்க வைத்து கொள்ள இந்தப் போட்டியில் இறங்கி அடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கோச்சாக இருந்த சேர்ஜியோ லோபரா மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு கிளிஃபர்டு மிராண்டா வந்த பின்பும் வெற்றி பயணத்தை மாற்றமில்லாமல் தொடர்ந்து வரும் எஃப்சி கோவா அணியின் முக்கிய ஆட்டக்காரர்களாக ஃபேர்ரன் கொரோமினாஸ், ஹூகோ பவுமஸ் மற்றும் மொர்டாடா ஃபால் ஆகியோர் உள்ளனர். எடு பிடியா மற்றும் அகமது ஜஹோஹ் ஆகியோரும் வலு சேர்க்கிறார்கள்.
"வீரர்களின் கூட்டு முயற்சியே நாங்கள் இந்த இடத்துக்கு வந்ததற்கு காரணம்," என கூறும் மிராண்டா, "அனைத்து மேட்சுகளுமே எங்களுக்கு முக்கியமானவை தான். அரையிறுதியில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," என்கிறார்.
சென்னையின் எஃப்சியை பற்றி அவர் கூறுகையில், "நாங்கள் மோதுவதற்கு மிகவும் கடினமான அணியாக கருதுவது சென்னையின் எஃப்சி அணியை தான். அவர்கள் தங்களை நன்றாக மெருகேற்றி கொண்டு உள்ளார்கள். கடந்த எட்டு ஆட்டங்களில் ஆறில் வென்று, இரண்டை டிரா செய்துள்ளார்கள். எனவே, இந்த ஆட்டம் எங்களுக்கு சவால் தான். ஆனால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம்," என்கிறார்.
Photos Courtesy : ISL Media