கோவா : விரைவில் முடிவுக்கு வர இருக்கும் இந்தியன் சூப்பர் லீக் சீசன், கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நினைவில் நீண்ட நாள் நிலைத்திருக்கும்.
இந்தியாவின் முக்கிய லீக்காக உருவெடுத்திருக்கும் ஐஎஸ்எல், பெரிதும் மதிக்கப்படும் ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் இந்த வருடம் இடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல், இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் மற்றும் கூட்டணிகளின் வலுவான விளையாட்டால் நிரம்பி இருந்தது.
இளைஞர்களை பற்றி பேசும் போது, சுமித் ரதியோடு தான் தொடங்க வேண்டும். 20 வயதேயான சுமித், ஏடிகே எஃப்சியின் முக்கிய வீரர்களில் ஒருவராக அணிக்கு வந்த சில நாட்களிலேயே மாறினார். ஆன்டானியோ ஹபாசுக்கு வலு சேர்த்த இவர், அச்சமில்லாமல் 11 முறை விளையாடினார்.
பெங்களூரு எஃப்சியின் சுரேஷ் சிங் வாங்ஜாம் பாராட்டுகளை அள்ளிய இன்னொரு வீரர் ஆவார். சீசனில் பாதியில் கார்லெஸ் குட்ராட்டால் அணியில் சேர்க்கப்பட்ட 19 வயதே நிரம்பிய இவர், விரைவில் அணியின் நிரந்தர சொத்தானார்.
"சுரேஷ் எங்களுக்கு நிறையவே உதவியுள்ளார். அவருடைய பங்கை சிறப்பான முறையில் அளித்துள்ளார். தன் திறமையின் மூலம் தேசிய அணியிலும் அவர் இடம் பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்," என்று புகழாரம் சூட்டுகிறார் குட்ராட்.
எஃப்சி கோவாவின் மன்வீர் சிங், ஜியாக்சன் சிங், முகமது ரகிப் (கேரளா பிளாஸ்டர்ஸ்), ரெடீம் டலாங் (நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி), ஷுபம் சாரங்கி (ஓடிஷா எஃப்சி) ஆகியோர் இளம் வயதிலேயே தங்கள் திறைமையை நிரூபித்த மற்ற வீரர்களாவர்.
இந்த சீசனில் விளையாடிய வெளிநாட்டு வீரர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பான முறையிலேயே அளித்தனர்.
ராய் கிருஷ்ணாவும் டேவிட் வில்லியம்ஸும் இறுதி சுற்றுக்கு சென்றிருக்கும் ஏடிகே எஃப்சிக்கு கிடைத்த தூண்கள் என்றால் அது மிகையாகாது. ஃபிஜி மற்றும் ஆஸ்திரிலேய கூட்டணியான இவர்கள் ஏடிகேவுக்கு எப்போதெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் தங்கள் திறைமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர். சமீபத்தில் பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்திலும் தங்கள் பங்களிப்பை அளித்தனர். கிருஷ்ணா 15 கோல்களும், வில்லியம்ஸ் 7 கோல்களும் அடித்துள்ளனர்.
"கிருஷ்ணா மற்றும் வில்லியம்ஸ் போன்ற சிறப்பான வீரர்கள் எங்கள் அணியில் இடம்பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் நல்லது. அவர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது," என்கிறார் ஏடிகேவின் கோச்சான ஆன்டானியோ ஹபாஸ்.
இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இன்னொரு அணியான சென்னையின் எஃப்சிக்கு ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் நெரிஜுஸ் வல்க்ஸிஸ் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். சென்னையின் எஃப்சி இறுதி போட்டிக்குள் நுழைந்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வல்க்ஸிஸ் 14 கோல்களும், கிரிவெல்லாரோ 7 கோல்களும் அடித்துள்ளனர்.
11 கோல்கள் அடித்த ஹுகோ பவுமஸ்ஸையும், 14 கோல்கள் அடித்த ஃபெர்ரான் கொரொமினாஸையும் யாரால் மறக்க முடியும்? அவர்களுக்கிடையேயான புரிதலே எஃப்சி கோவாவை லீக் மேட்சுகளில் முன்னிலைப் படுத்தியது. கேரளா பிளாஸ்டர்ஸால் தகுதி சுற்றுக்குள் நுழைய முடியவில்லை என்றாலும், பார்தொலொமேவ் ஒபிச்சி (15 கோல்கள்) மற்றும் ரஃபேல் மெஸ்ஸி பவுலி (8 கோல்கள்) ஆகியோர் அந்த அணிக்கு தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
மைதானத்துக்குள்ளே மட்டுமல்ல, வெளியிலும் சில நல்ல கூட்டணிகள் இந்த வருடம் அமைந்தன. நிறைய முக்கிய ஒப்பந்தங்கள் இந்த சீசனில் கையெழுத்திடப் பட்டன. மான்செஸ்டர் சிட்டியின் உரிமையாளரான சிட்டி ஃபுட்பால் குரூப், மும்பை சிட்டி எஃப்சியின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. இந்திய கால்பந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
"இந்த முடிவு இதில் தொடர்புடையவர்களுக்கு, அதாவது மும்பை சிட்டி எஃப்சி மற்றும் சிட்டி ஃபுட்பால் குரூப்புக்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய கால்பந்துக்கும் நன்மை 6பயக்குமென நம்புகிறோம். மும்பை சிட்டி எஃப்சியை வலுப்படுத்தப் போகும் அதே நேரத்தில், இந்திய கால்பந்தின் வருங்காலத்தை செழுமைப்படுத்தவும் நாங்கள் முனைப்பாக இருக்கிறோம்," என்கிறார் சிட்டி ஃபுட்பால் குரூப்பின் தலைவரான கல்தூன் அல் முபாரக்.
ஏடிகே, மோஹுன் பகனுடன் கைகோர்த்துள்ளதும் இந்த சீசனில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆக மொத்தம், இந்த சீசன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. சனியன்று ஏடிகே எஃப்சிக்கும், சென்னையின் எஃப்சிக்கும் இடையே நடக்கவிருக்கும் இறுதி ஆட்டம் இந்த ஐஎஸ்எல் சீசனின் முத்தாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photos Courtesy : ISL Media