மும்பை : ஃபிஃபா 2022 உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஓமன் அணியுடன் இந்தியா கடந்த செவ்வாயன்று ஆடியது.
இதில் களமிறங்கிய இந்திய அணியில் ஃபரூக் சவுத்ரி மற்றும் மன்வீர் சிங்கை சேர்த்து ஆச்சரியம் அளித்தார் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்.
ஹீரோ ஐஎஸ்எல்லில் சிறப்பாக ஆடியதால்தான் இவ்வாய்ப்பை அவர்களுக்கு அளித்தார் ஸ்டிமாக். ஜாம்ஷெட்பூர் அணிக்காக ஃபரூக் அசத்தியிருந்தார். எஃப்சி கோவா அணியை சில போட்டிகளில் முன்னின்று வழி நடத்தியிருந்தார் மன்வீர்.
"கடந்த இரு மாதங்களாக ஃபரூக் தன் திறமையை வெகுவாக வளர்த்துக்கொண்டிருந்தார். இதே வேகத்தில் அவர் முன்னேறினால் தேசிய அணியில் இடம் பிடிப்பது உறுதி" என ஜாம்ஷெட்பூர் தலைமை பயிற்சியாளர் அன்டோனியோ இரியாண்டோ ஏற்கனவே கூறியிருந்தார். அவரது வார்த்தைகள் இப்போது பலித்தே விட்டது.
ஃபரூக்கும் மன்வீரும் மட்டுமல்ல.. ஐஎஸ்எல்லில் மின்னி வரும் மேலும் சில வீரர்களும் தேசிய அணியில் இடம்பெறும் வேளை நெருங்கிவிட்டது. யாரை சேர்ப்பது என்பது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ஸ்டிமாக் உற்று கவனித்து வருகிறார்
ரதீம் லாங் எதிர்பாராத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறார். 24 வயதான இந்த மேகாலயா வீரர் பயிற்சியாளர் ராபர்ட் ஜானியின் பட்டை தீட்டுதலில் ஜொலிக்கிறார்.
கடந்த சீசனில் 19 போட்டிகளில் ஆடி ஒரு கோல் மட்டுமே அடித்த லாங், தற்போது முதல் 4 போட்டிகளில் 2 கோல் அடித்துவிட்டார். இவரது சகாவான 22 வயது ஃபுல் பேக் வீரர் ராகேஷ் பிரதானும் பளிச்சிட்டு வருகிறார்.
சந்தோஷ் கோப்பையில் கோவாவுக்காக நன்றாக ஆடிய அதன் கேப்டன் ஜெஸ்ஸல் கார்னிரோ ஐஎஸ்எல்லில் கேரளா பிளாஸ்டருக்காக ஆடி வருகிறார்.
அனிருத் தாப்பா, சாஹல் அப்துல் சமது ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். நார்த்ஈஸ்ட் யுனைட்டெட், ஜாம்ஷெட்பூர் எஃப்சி, எஃப்சி கோவா அணிகளில் சில வீரர்கள் எதிர்பாராத வகையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தேசிய அணி பயிற்சியாளர் ஸ்டிமாக்கின் கவனத்தை கவர்ந்தாலும் ஆச்சரியமில்லை.
Photos Courtesy : ISL Media