மும்பை: கடந்த சீசனில் ஹீரோ சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியிடம் பெங்களூரு எஃப்சி பரிதாபமாக தோற்றது.
அந்த போட்டியில் பெங்களூரு நடுக்கள வீரர் டிமாஸ் டெல்கடோ காயமடைந்து விலகியது பெங்களூருவை மேலும் பாதித்தது. தனது அணி தனது ரசிகர்கள் முன்பு தோற்பதை பார்க்க மட்டுமே ஸ்பானிய வீரர் டெல்கேடோவால் முடிந்தது.
இந்நிலையில் அந்த சோகத்தை சரி செய்யும் வகையில் எஃப் சி கோவாவுடன் இந்த சீசனின் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு டிமாசுக்கு கிடைத்துள்ளது. மும்பையில் இன்று இப்போட்டி நடக்கிறது.
"இறுதிப்போட்டிக்குள் நுழைவது எப்போதுமே மகிழ்ச்சியானது. கடின முயற்சிக்கு பின் அந்த வாய்ப்பை பெற்றுள்ளோம்.
கடந்த முறை துரதிர்ஷ்டவசமாக ஆடாமல் போன நிலையில் இம்முறை நன்றாக ஆடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் டெல்கேடோ.
பரபரப்பான ஐஎஸ்எல் இறுதிப் போட்டி.. 2019 சீசனின் கோப்பையை வெல்லப்போகும் அணி எது?
இறுதிப்போட்டியில் தோற்ற அனுபவம் கோவாவுக்கும் உள்ளது. 2015 இறுதிப்போட்டியில் சென்னையின் அணி கோவாவை வீழ்த்தியிருந்தது. அப்போது கோவா அணியில் ஆடிய மண்டர் ராவ் தேசாய் தற்போது அந்த அணி கேப்டனாக உள்ளார்.
4 ஆண்டுக்கு முந்தைய சோகத்தை தற்போது தீர்க்க நினைக்கிறார் தேசாய். சென்னையின் அணியிடம் 3-2 என தோற்ற அந்த நாள் நன்றாக நினைவிருப்பதாக கூறுகிறார் தேசாய். "அப்போதிருந்ததை விட இப்போது நிறைய மாறியுள்ளோம். கவனமுடன் ஆடி கோப்பை வெல்ல முயற்சிப்போம்" என்கிறார் தேசாய்.
விங்கராக ஆடத்தொடங்கிய தேசாய் தற்போது கோவா அணியின் தவிர்க்க இயலா நபராகி விட்டார். இதற்கு பயிற்சியாளர் செர்கை லொபராதான் காரணம்.
ஃபெரான் கொரோமினஸ் கோவா அணியின் தூணாக உள்ளார். இவர் இத்தொடரில் 16 கோல் அடித்துள்ளார். பெங்களூருவுக்கு எதிரான ஆட்டங்களில் திணறிய இவர் இறுதிப்போட்டியில் தவறுகளை சரி செய்ய துடிப்பாக உள்ளார்.
ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கப்போவது நிச்சயம். இறுதிப்போட்டியில் தோற்கும் சோகத்திற்கு முடிவு கட்டும் அணி எது என்ற கேள்விக்கும் இப்போட்டியில் விடை கிடைக்கும்
(Photos Courtesy - ISL)