பெங்களூரு : கடந்த ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூரு அணி களம் இறங்குகிறது.
யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியை கடந்த ஆட்டத்தில் மும்பை அணி தோற்கடித்தது. இந்நிலையில் நாளை பெங்களூரு காண்டீரவா ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் அணியை எதிர்த்து விளையாட பெங்களூரு அணி தயாராகி வருகிறது.
பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணியும் இதே புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடியுள்ளது. தற்போது ஒரு வெற்றி கிடைத்தால் புள்ளி அட்டவணையில் முதலிடத்தை பெற்றுவிடலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட், ஆட்டத்தின் இறுதி நாளில் நாங்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போராடுவோம் என்றார். யாராலும் வெல்ல முடியாது என்ற நிலையில் இருந்த எங்கள் அணி கடந்த ஆட்டத்தில் தோற்றது ஏமாற்றமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
நார்த் ஈஸ்ட் அணி 13 போட்டிகளில் விளையாடி 23 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவர்களுடன் மோதுவது என்பது சற்று சவாலான விஷயம் என்று குறிப்பிட்டுள்ள குவாட்ரெட் அந்த அணி நன்றாக விளையாடி மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டால் கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடிக்கும் என தெரிவித்தார்.
இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி, பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும். தற்போது தகுதிச் சுற்றுக்கு மிக அருகில் உள்ளோம். அதனால் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்தார். ஆனால் காயம் காரணமாக வெளியில் இருந்த செஞ்ச்சோ தற்போது அணிக்கு திரும்பி இருப்பதால் பெங்களூரு அணி பயப்படத் தேவையில்லை என்றும் ஷட்டரி தெரிவித்தார்.
கடந்த ஆட்டத்தில் சென்னை அணியை நார்த் ஈஸ்ட் அணி வீழ்த்தியது ஒரு உத்வேகத்தை தந்துள்ளது என்றும் பர்த்தலோமிவ் ஆக்பேச் அதிரடி ஆட்டம் அதற்கு உதவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
10 கோல்கள் அடித்து கோல்டன் பூட் பெற்றுள்ள ஃபெரான் கொராமினாஸ் சாதனையை இந்த நைஜீரியன் வீரர் இந்த போட்டியில் முறியடிப்பார் எனவும் ஷட்டரி கூறினார்.
ஆக்பேக், கொரோமினாஸ், (மௌடோ) சோகோ ஆகிய மூன்று வீரர்களும் அற்புதமான ஸ்ட்ரைக்கர்ஸ் என்றும் அவர்கள் நார்த் ஈஸ்ட் அணியின் முக்கியமான வீரர்கள் என்றும் குவாட்ரெட் தெரிவித்தார்.
பெங்களூரு அணி இந்த ஆட்டத்துக்காக மிக நன்றாக பயிற்சி எடுத்துள்ளது.. ஆனால் அந்த அணியின் முக்கியமான ஸ்ட்ரைக்கர் விளையாடவில்லை என்பது அந்த அணிக்கு நல்லதல்ல. அதே நேரத்தில் மிக்கு விளையாடவில்லை என்பது எங்களுக்கு அதிர்ஷ்டம் என ஷட்டரி தெரிவித்தார்.
கால்பந்து போட்டிகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதால், பெங்களூரு அணியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நார்த் ஈஸ்ட் களம் காண்கிறது.
(Photos Courtesy - ISL)