சென்னை : பெங்களூரு அணியின் முக்கிய வீரர்களான சுனில் ஷட்டரி மற்றும் உதாந்தா சிங் ஆகியோர் இன்று (பிப்ரவரி 9) நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஓய்வு எடுக்கவுள்ளனர். அவர்கள் இல்லை என்றாலும் மற்ற வீரர்கள் பெங்களூரு அணியை நிச்சயமாக பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்வார்கள் என அவர்கள் நம்புகின்றனர்.
பெங்களூரு அணி தற்போது 14 ஆட்டங்களில் விளையாடி 31 புள்ளிகளைப் பெற்று அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது. சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த நல்ல நிகழ்வு ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியின் தற்போதைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த சென்னை தற்போது கடைசி இடத்தில் உள்ளது. தற்போது முதல் இடத்தில் உள்ள பெங்களூரு அணியும், கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியும் மோதுகின்றன.
பெங்களூரு அணியின் அதிரடி வீரர் மிக்கு கேரளா அணியுடன் விளையாடிய போது காயமடைந்தார். தற்போது அவர் காயம் சரியாகி களத்தில் குதிக்கிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் மிக்குவின் அதிரடி ஆட்டத்தை பார்க்கலாம். தடுப்பாட்டத்துக்கான வழி முறைகளை நாங்கள் கையாளுவோம். அதே நேரத்தில் எங்கள் அணியில் உள்ள நான்கு தடுப்பாட்டககாரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே எங்கள் வீரர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.
ஏஎஃப்சி ஆசிய கோப்பைக்கான இடைவேளையின் போது எங்கள் அணி வீரர்கள் முழு வீச்சில் பயிற்சி எடுத்தார்கள். ஆனாலும் இடைவேளைக்குப் பிறகான முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் 1 - 0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தோம், ஆனால் அடுத்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியை 2 - 1 எனற கோல் கணக்கில் ஜெயித்தோம். மூன்றாவது ஆட்டத்தில் கேரளா அணியை 2 - 2 என்ற கோல் கணக்கில் சமன் செய்தோம் என்கிறார் குவாட்ரெட்.
சென்னை அணியைப் பொறுத்தவரை இந்த சீசன் முழுவதும் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.
அந்த அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி விரும்புவதெல்லாம் ஒன்றுதான், எஞ்சியுள்ள நான்கு ஆட்டத்திலும் அந்த அணி ஒரு கௌரவமான வெற்றியைப் பெற வேண்டும்.
புதிய வீரரான சி.கே.வினீத் நன்றாக விளையாடுவார் என கிரிகோரி எதிர்பார்க்கிறார். ரசிகர்கள் எப்படியாவது பெங்களூரு அணியை ஜெயிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எனவே ரசிகர்களுக்கு எங்கள் பழைய ஆட்டத்தை காண்பிப்போம் என்கிறார் கிரிகோரி..
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த இரு அணிகளும் மோதிய போது மிக்கு ஒருவரே சமாளித்து வெற்றியை வாங்கித் தந்தார். கண்டிப்பாக அவருடைய ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.