சென்னை : சென்னையில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் புனே அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 67 ஆவது கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கும் எஃப்சி புனே சிட்டி அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே புனே அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மாசிலோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதே போல் ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் ஜெர்மன்பிரீத் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு கோல் அடிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.
ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்திலும் இரு அணிகளுமே கோல் எதுவுமே அடிக்கவில்லை இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் சி.கே.வினித் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
இதைத் தொடர்ந்து 59 ஆவது நிமிடத்தில் புனே சிட்டியின் மார்சிலோ ஒரு கோல் அடித்து அசத்தினார். பின்னர் ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் புனே அணியின் மார்சிலோ மீண்டும் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆறு நிமிட இடைவெளிகளில் 3 கோல்கள் அடிக்கப்பட்டதால் போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.
ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் இரண்டு வீரர்கள் மாற்றப்பட்டனர். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் டான்டான் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 76 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 79 ஆவது நிமிடத்தில் புனே சிட்டி அணியின் அடில் கானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கடுமையாக மோதின. இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த மூன்று நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து புனே அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.