சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற உள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், சென்னை அணிக்கு எதிராக ஜாம்ஷெட்பூர் அணி குறைந்தது மூன்று புள்ளிகள் எடுத்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ஜாம்ஷெட்பூர் அணி புள்ளி அட்டவணையில் 5 ஆவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள மும்பை சிட்டி அணியைவிட நான்கு புள்ளிகள் குறைவாக பெற்றுள்ளது. அந்த அணி இன்னும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ள நிலையில் சென்னை அணியை வென்றாக வேண்டய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று புள்ளிகளுக்கு குறைவாக எடுத்தாலோ அல்லது டிரா செய்தாலோ ஜாம்ஷெட்பூர் அணியின் பிளே ஆஃப் கனவு தகர்ந்து விடும்.
ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ, இந்த போட்டி டிராவில் முடிந்து விடுமோ என்ற கவலையில் உள்ளார். அதே நேரத்தில் அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம் என்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சீசர் ஃபெராண்டோ, தற்போது ஒரு வெற்றி கண்டிப்பாக வேண்டும். ஆனால் சென்னை அணி போன்ற ஒரு நல்ல அணியுடன் விளையாடுவது என்பது சற்று கடினமானதுதான் என்கிறார். சென்னை அணியில் இரண்டு சிறந்த வீரர்கள் கடந்த மாதம் சேர்க்கப்பட்டுள்ளனர்..
இந்த சீசன் முடியவுள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் அணியின் பழைய பதிவுகளை சற்று திரும்பிப் பார்ப்பதாக கூறும் ஃபெராண்டோ, தற்போது எங்கள தேவை வெற்றி ஒன்றுதான் என்கிறார்.
ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை பந்து என்பது ஒரு பிரச்சனையே அல்ல. மெமோ மற்றும் மரியோ ஆர்க்ஸ் ஆகியோர் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். செர்ஜியோ சிடோன்கா மற்றும் கார்லோஸ் கால்வோ ஆகியோரும் மிக நன்றாக விளையாடி தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். ஆனால் தற்போது எடுக்க வேண்டிய புள்ளிகளின் இலக்கு அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த மைக்கேல் சூசைராஜ் தற்போது ஜாம்ஷெட்பூர் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறது.
சென்னை அணியைப் பொறுத்தவரை ஒரு இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்த அணி தற்போது கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை அணி இது வரை இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. 5 ஆண்டு கால ஐஎஸ்எல் வரலாற்றில் நார்த் ஈஸ்ட் அணி மட்டுமே மிகக் குறைந்த அளவாக 11 புள்ளிகளைப் பெற்றிருந்தது. ஆனால் ஜான் கிரிகோரியின் சென்னை அணி தற்போது அதைவிட ஒரு மோசமான நிலைக்கு வந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜான் கிரிகோரி, எங்கள் சொந்த மண்ணில் நாங்கள் விளையாடும் கடைசி ஆட்டம் இது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர்.
கடந்த வாரம் எங்கள் அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. ஆனால் அடுத்து வரும் இரண்டு ஐஎஸ்எல் போட்டிகளிலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியைத் தோற்கடித்து அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று கனவைத் தகர்ப்போம் என்கிறார் கிரிகோரி.
ஆனாலும் ஜாம்ஷெட்பூர் அணி கடந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியது போல் சென்னை அணியையும் வீழ்த்தி 3 புள்ளிகள் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
(Photos Courtesy - ISL)