ஜாம்ஷெட்பூர் : புள்ளி அடிப்படையில் சிறிதளவே வித்தியாசம் உள்ள ஜாம்ஷெட்பூர் அணிக்கும், புனே சிட்டி அணிக்கும் இடையே இன்று (பிப்ரவரி 16) ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜெஆர்டி டாடா விளையாட்டு அரங்கில் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன.
புள்ளி அட்டவணையில் 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஜாம்ஷெட்பூர் அணி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
சீசர் ஃபெராண்டோவின் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள், நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம். மும்பை சிட்டி அணிக்கு எதிராக நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 80 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் போன்று இந்த ஆட்டத்திலும் விளையாடினால் வெற்றி பெறலாம்.
ISL 2019 : கோல் மழை பொழிந்த கேரளா அணி.. சென்னை அணி பரிதாபம்!
இரண்டு அணிகளுமே ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன. அட்டவணையில் முதல் நான்கு இடங்களுக்குள் எங்கள் அணி வர வேண்டும் என்றால் இந்த போட்டியில் நாங்கள் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்கிறார் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ.
மேலும் அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து தயாராகி வருகிறோம். வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் அணி உள்ளதால் அதை நோக்கி எங்கள் அணி செல்லும் என்றும், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் நம்புவதாக சொல்கிறார் ஃபெராண்டா.
மூன்று போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்ட கார்லஸ் கால்வோ தற்போது ஜாம்ஷெட்பூர் அணியில் களம் காண்கிறார். நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கேல் சூசைராஜும் இந்த போட்டியில் விளையாட உள்ளது, அந்த அணிக்கு பெரிய பலத்தைக் கொடுக்கும்.
ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரையில் சொந்த மண்ணில் விளையாடி 7 போட்டிகளில் அனைத்திலுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியே புனே அணிக்கு எதிரான போட்டிக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும், மேலும் அடுத்து பெங்களூரு அணியை எதிர் கொள்ளும் துணிச்சலையும் கொடுக்கும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர்.
புனே சிட்டி அணியைப் பொறுத்தவரை இடைவேளைக்கு முன்பு வரை மோசமான நிலையில் இருந்தது. அதன் பின்னர் அந்த அணி மீண்டெழுந்துள்ளது. ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான போட்டி உட்பட கடந்த மூன்று போட்டிகளிலும் புனே அணி வெற்றியை ருசித்துள்ளது.
குளிர்கால இடைவேளைக்குப் பிறகு பில் பிரௌன் புனே அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை, ஏடிகே மற்றும் ஜாம்ஷெட்பூர் என மூன்று அணிகளையும் புனே வென்றுள்ளது.
ஜாம்ஷெட்பூர் அணி மிகச் சிறந்த அணி. அதனுடன் விளையாடுவது சவால் நிறைந்தது. நீண்ட நாட்களாக நாங்கள் நன்றாக உழைத்து வருகிறோம். அது எங்களை மனதளவில் உயர்த்தியுள்ளது என்கிறார் பில் பிரௌன்.
ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் வெற்றியை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
(Photos Courtesy - ISL)