பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 64 ஆவது கால்பந்து போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீவரா ஸ்டேடியத்தில் பெங்களூரு எஃப்சி அணிக்கும், நார்த் ஈஸ்ட் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகச் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின 14 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிஸ்லேவ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 28 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மேஸ்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளுமே அதிரடியாக விளையாடின. ஆனால் கோல் எதுவுமே போடவில்லை. முதல் பாதியின் முடிவில் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அப்போது நார்த் ஈஸ்ட் அணியின் ஜோசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 51 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியிலும், 54 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடாரிக்கோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 71 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ரினோ வெளியேற்றப்பட்டு குர்சிம்ரத் சிங் களம் இறக்கப்பட்டார்.
அதே 71 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் செஞ்சோ கோல் அடித்து அசத்தினார். 74 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ராகுலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டன. பெங்களூரு அணியை சமன் செய்ய நார்த் ஈஸ்ட் அணியினர் பெரு முயற்சி செய்தனர்.
இதையடுத்து ஆட்டத்தில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த இரண்டு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து பெங்களூரு அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)