கவுஹாத்தி : கவுஹாத்தியில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியின் முதல் லீக் கால்பந்து போட்டி கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கும், பெங்களூரு எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி வலது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.
நார்த் ஈஸ்ட் அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீம் தலாங் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மிக்குவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி வெளியேற்றப்பட்டு, ஜுவான் களம் இறக்கப்பட்டார்.
கூடுதலாக கொடுக்கப்பட்ட அந்த இரண்டு நிமிடத்தில் இரண்டு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 59 நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 61 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீமுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரெடீம் வெளியேற்றப்பட்டு கீகன் களம் இறக்கப்பட்டார்.
இதையடுத்து ஆட்டத்தில் 82 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஹார்மன் ஜோத்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அதாவது 90 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ஜுவான் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் அரையிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
(Photos Courtesy - ISL)