கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 21வது லீக் போட்டியில் பெங்களூரு எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் சரி சமமாக போட்டி போட்டு ஆடின. முடிவில் 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.
இந்தப் போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி 4வது நிமிடத்தில் கோல் அடித்து மிரள வைத்தது. அப்போதே போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அடுத்து கடுமையாக முயற்சி செய்த பெங்களூரு அணி 13வது நிமிடத்தில் தன் முதல் கோலை அடித்து சமன் செய்தது.
அதன் பின் இரு அணிகளும் அடுத்த கோலை அடிக்க தீவிரம் காட்டின. இரண்டாம் பாதியிலும் பாதி நேரம் முடிந்த நிலையில் அந்த கோல் அடிக்கப்பட்டது.
70வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் மாற்று வீரர் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார். அப்போது பெங்களூரு அணி வெற்றி பெற்று விடும் என்றே பலரும் எண்ணினர். ஆனால், அடுத்த எட்டு நிமிடங்களில் எதிர்பாராத பதிலடி கொடுத்தது நார்த் ஈஸ்ட்.
78வது நிமிடத்தில் அந்த அணியின் மாச்சாடோ கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் 2 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி சமன் ஆனது. யாருக்கும் வெற்றி கிடைக்காவிட்டாலும் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமைந்தது.