கோவா : பெங்களூரு எஃப்சி அணி முன்னாள் சாம்பியன் என்றாலும் இந்த சீசனில் படுமோசமான நிலையில் உள்ளது.
தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் அந்த அணி தவித்து வருகிறது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா எஃப்சி அணி பெங்களூருக்கு தோல்வி பயத்தை காட்டியது.
இந்தப் போட்டியில் ஒடிசா அணி எட்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்தா அணியின் டியாகோ மொரிசியோ அசத்தலாக செயல்பட்டு கோல் அடித்தார்.
அதன் பின் 81வது நிமிடம் வரை பெங்களூரு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. பெங்களூரு அணி தோல்வி அடையப் போகிறது என எண்ணிய நிலையில், எரிக் பார்த்தாலு 82வது நிமிடத்தில் கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதை அடுத்து போட்டியின் முடிவில் 1 - 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் டிரா செய்தன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பரிதாபமாக காட்சி அளித்தது.
இந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 13 போட்டிகளில் அந்த அணி 14 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.
ஒடிசா அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 11வது இடத்தில் உள்ளது. அந்த அணி 13 போட்டிகளில் 8 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது.