கோவா : எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி, பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அதிர வைத்துள்ளது.
இந்த சீசனின் துவக்கத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி மிக மோசமாக ஆடி வந்தது. ஆனால், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடந்த நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் மூன்று டிரா செய்து தோல்வி அடையாமல் இருந்தது.
மறுபுறம் பெங்களூரு அணி தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து பரிதாபமாக மாறி வந்தது.
ஈஸ்ட் பெங்கால் அணியை பெங்களூரு வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றே ரசிகர்கள் எண்ணிய நிலையில், அதற்கு மாறான சம்பவம் நடந்தது,
ஈஸ்ட் பெங்கால் அணியின் மட்டி ஸ்டெய்ன்மான் முதல் பாதியில் ஒரு கோல் அடித்தார். அதன் பின் கடைசி நிமிடங்களில் தடுப்பாட்டம் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணி பெங்களூரு அணி கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டது.
இந்த வெற்றி மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி பத்து போட்டிகளில் பத்து புள்ளிகளை பெற்றுள்ளது. தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது அந்த அணி. தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கும் ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்த போட்டிகளிலும் வென்றால் இந்த சீசனில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
பெங்களூரு அணி 10 போட்டிகளில் 12 புள்ளிகள் மட்டுமே பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களுக்கான போட்டியில் ஈஸ்ட் பெங்கால் இடம் பெறுமா? என்பதே இப்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.