கோவா : எஃப்சி கோவா - ஏடிகே மோகன் பகான் இடையே ஆன லீக் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே போட்டி டிராவில் முடிந்தது.
முதல் பாதியில் கோவா அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியது. பந்தை தன்வசமே பெரும்பாலான நேரம் வைத்திருந்தது. அதே சமயம் ஏடிகே மோகன் பகான் அணி கோல் விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொண்டது.
இரண்டாம் பாதியில் ஆட்டம் மாறியது. இரண்டு அணிகளும் கோல் அடிக்க போராடிய நிலையில், ஏடிகே மோகன் பகான் முதலில் கோல் அடித்தது.
75வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணியின் எடு கார்சியா ஃப்ரீகிக் வாய்ப்பின் மூலம் கோல் அடித்தார். அடுத்து கோவா அணியின் மாற்று வீரர் இஷான் பண்டிதா 83வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு எடுத்து வந்தார்.
அதன் பின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் இருக்கவே போட்டி டிரா ஆனது.
ஒருவேளை இந்தப் போட்டியில் கோவா அணியை கோல் அடிக்க விடாமல் செய்து, ஏடிகே மோகன் பகான் வெற்றி பெற்று இருந்தால் மூன்று புள்ளிகள் பெற்று இருக்கலாம். அதன் மூலம், புள்ளிப் பட்டியலில் மும்பை சிட்டி அணியை நெருங்கி இருக்கலாம்.
ஆனால், போட்டி டிரா ஆனதால் 21 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது ஏடிகே மோகன் பகான். கோவா அணி 19 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது.