கோவா : ஐஎஸ்எல் 2020-21 சீசனின் 3வது லீக் போட்டியில் எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி அணிகள் மோத உள்ளன.
கோவா அணி கடந்த இரண்டு சீசன்களில் சிறப்பான அணியை கொண்டிருந்தும் கோப்பை வெல்ல முடியவில்லை.
2015 மற்றும் 2018 சீசனில் அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தது. அந்த குறையைப் போக்க இந்த சீசனில் அந்த அணி தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.
அணியை பெரிய அளவில் மாற்றி உள்ள கோவா, பயிற்சியாளரையும் மாற்றி உள்ளது. ஜுவான் பெர்ராண்டோ அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் பயிற்சியாளர் செர்ஜியோ லொபேரா புகழ்பெற்றவராக விளங்கய நிலையில், அதை பெர்ரண்டோ ஈடுகட்டுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மறுபுறம் பெங்களூரு எஃப்சி அணியும் வலுவாகவே உள்ளது. அந்த அணி ஒரு முறை ஐஎஸ்எல் கோப்பை வென்றுள்ளது. சுனில் சேத்ரியை நம்பியே அந்த அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அந்த அணிக்கு பலமாகவும் மாறி உள்ளது.
அந்த அணியின் கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சாந்து கடந்த சீசனில் 11 போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்காமல் பார்த்துக் கொண்டார். அவரும் இந்த சீசனில் முக்கியமானவராக அறியப்படுகிறார்.
எஃப்சி கோவா - பெங்களூரு எஃப்சி இடையே ஆன லீக் போட்டி கோவாவில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அனைத்து ஐஎஸ்எல் போட்டிகளும் கோவாவில் தான் நடைபெற உள்ளது.