கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஃப்சி கோவா - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்கவே போட்டி டிராவில் முடிந்தது.
கோவா அணி சிறப்பாக ஆடிய போதும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் கோல் கீப்பரை தாண்டி அதிக கோல்கள் அடிக்க முடியவில்லை.
புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் கோவா அணியை சந்தித்தது கேரளா. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடையாமல் சிறப்பாக ஆடி வந்த கேரளா அணி, இந்தப் போட்டியில் வலுவான கோவா அணியை சமாளித்து ஆடியது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் கோவா முதல் கோலை அடித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரளா அணியில் ராகுல் கேபி 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். அப்போது போட்டி 1 - 1 என்ற சமநிலையை எட்டியது.
அதன் பின் இரு அணிகளும் ஆட்ட நேரம் முடியும் வரை கோல் அடிக்கவில்லை. போட்டியின் முடிவில் 1 - 1 என இரு அணிகளும் போட்டியை டிரா செய்தன.
இந்த டிராவின் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. கோவா அணி தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. கேரளா அணி ஒரு புள்ளி பெற்றதன் மூலம் ஏழாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. பெங்களூரு, ஜாம்ஷெட்பூர் அணிகள் எட்டு மற்றும் ஒன்பதாம் இடத்தில் உள்ளன.