கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே ஆன போட்டி நடைபெற உள்ளது.
கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி அடைந்துள்ளது.
அந்த அணி பெங்களூரு எஃப்சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றி நம்பிக்கை அளித்துள்ளது. முதல் நான்கு இடங்களுக்குள் செல்வது கடினம் என்றாலும் சில வெற்றிகளை பெற்று அந்த அணியால் ஆறுதல் பெற முடியும்.
இந்தப் போட்டியில் கேரளா அணியில் இளம் வீரர்கள் ராகுல் கேபி மற்றும் ஜீகன் சிங் தடை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நான்கு மஞ்சள் அட்டை பெற்றதால் இந்த தடையை அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மறுபுறம் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி கடந்த ஐந்து போட்டிகளில் மூன்று தோல்விகளை பெற்று மோசமான நிலையில் உள்ளது. அந்த அணி புதிய வீரர்களை அணியில் சேர்த்துக் கொண்டு வெற்றி பெற திட்டமிட்டு வருகிறது.
இரண்டு அணிகளும் சம அளவிலான பலத்துடன் இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த அணிகளுக்கு இடையே ஆன போட்டி டிரா ஆகும் என கருத்து கூறி உள்ளனர். அதே சமயம் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.