கோவா : ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அதிக முறை கோல் அடிக்கும் வாய்ப்புக்களை உருவாக்கிய போதும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
ஜாம்ஷெட்பூர் அணியும் கோல் அடிக்காத நிலையில் போட்டி டிராவில் முடிந்தது.
ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் கோவாவில் நடைபெற்று வருகிறது.
இந்த லீக் சுற்றில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதிய போட்டி நடந்தது. இரு அணிகளும் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற வேண்டிய வாய்ப்பை நழுவ விடாமல் இருக்க தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் இருந்தன.
முதல் கால் பகுதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது. சில கோல் வாய்ப்புக்களை பெற்று வீணாக்கியது. அடுத்த கால் பகுதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும், கோல் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியிலும் இதே நிலை நீடித்தது. இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் இரு அணிகளும் 0 - 0 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தன. இந்த டிரா மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது.
கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் 14 போட்டிகளில் ஆடி 15 புள்ளிகள் எடுத்துள்ளன. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி எட்டாம் இடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணி ஏழாம் இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் முதல் நான்கு இடங்களை பெறுவது கடினமானதாக மாறி உள்ளது.