131 வருட பாரம்பரியம்
ஏடிகே அணி, இந்த சீசன் முதல் 131 வருட பாரம்பரியம் கொண்ட மோகன் பகான் அணியுடன் இணைந்து ஐஎஸ்எல் தொடரை சந்திக்க உள்ளது. அதனால் அந்த அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏடிகே அணி மூன்று முறை ஐஎஸ்எல் கோப்பை வென்றுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பு
அதே போல, மோகன் பகான் அணி ஐந்து முறை ஐ-லீக் கோப்பை வென்றுள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் அந்த அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இது வரை கோப்பை வெல்லாத நிலையில், இந்த சீசனில் மீண்டும் பயிற்சியாளரை மாற்றி இருந்தது.
திருப்பம்
அதில் தான் ஒரு திருப்பம். மோகன் பகான் அணியை கடந்த சீசனில் ஐந்தாவது ஐ-லீக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் கிபு விகுனாவை பயிற்சியாளராக நியமித்து இருந்தது கேரளா பிளாஸ்டர்ஸ் அணி.
கேரளா வியூகம்
முதல் போட்டியில் இரு அணிகளும் துவக்கத்தில் தடுப்பாட்டத்தை கடைபிடித்தன. கேரளா அணி 4 - 2 - 3 - 1 என்ற கடுமையான தடுப்பாட்ட வியூகத்தை கையில் எடுத்தது. முதல் பாதியில் கேரளா அணி ஆதிக்கம் செலுத்தியது.
ராய் கிருஷ்ணா
ஆனால், இரு அணிகளாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் 67வது நிமிடத்தில் ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா கோல் அடிக்க போட்டி ஏடிகே அணி பக்கம் சாய்ந்தது. கேரளா அணியால் கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை.
வெற்றி
2020-21 ஐஎஸ்எல் தொடரின் முதல் லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 0 - 1 என்ற கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஏடிகே மோகன் பகான் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று கடந்த வருட சாம்பியன் என்பதை களத்தில் சுட்டிக் காட்டியது.