கோவா : ஏழாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற உள்ளது.
மும்பை சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய பத்து போட்டிகளில் எட்டு வெற்றிகள், ஒரு தோல்வி, ஒரு டிரா செய்துள்ளது.
அந்த அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபேரா மிக வலிமையான அணியை கட்டமைத்துள்ளார். ஹைதராபாத் அணி நன்றாக தொடரை துவங்கினாலும், இடையே தோல்விகளை சந்தித்து இருந்தது.
ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் அந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று நம்பிக்கையுடன் காட்சி தருகிறது. அரிடேன் சான்டானாவை நம்பியே அந்த அணி உள்ளது. அவர் மும்பை அணியின் கடினமான தடுப்பாட்ட வியூகத்தை மீறி கோல் அடிக்க வேண்டும்.
இரண்டு அணிகளுமே பலமான தாக்குதல் பாணி ஆட்டத்தை கொண்டு ஆடும் என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், ஹைதராபாத் அணி, மும்பையை வீழ்த்தி விட்டால் அது பெரிய வெற்றியாக இருக்கும்.
எனினும், விமர்சகர்கள் மும்பை சிட்டி அணியே வெற்றி பெறும் என கருதுகிறார்கள். அதற்கு காரணம், அந்த அணியின் தடுப்பாட்டம் மற்றும் பயிற்சியாளர் செர்ஜியோ லோபேரா தான். தாக்குதல் பாணி ஆட்டத்தை மட்டுமே வைத்திருக்கும் ஹைதராபாத் அணி வெல்வது மிகவும் கடினமே.