கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி, இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதல் பாதி முழுவதும் பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தியது ஏடிகே மோகன் பகான். அதையும் தாண்டி அவ்வப்போது கோல் அடிக்க முயற்சி செய்தது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட்.
ஆனால், இரண்டாம் பாதியில் ஏடிகே மோகன் பகான் அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 60வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் லூயிஸ் மாச்சாடோ கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக ராய் கிருஷ்ணா 72வது நிமிடத்தில் கோல் அடித்து ஏடிகே மோகன் பகான் அணியை சமநிலைக்கு எடுத்து வந்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் மீண்டும் கோல் அடித்தது.
நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் பெடேரிக்கோ கல்லேகோ 81வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் 2 - 1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி, ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் 18 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஏடிகே மோகன் பகான் அணி 24 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது.