கோவா : 2020-21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 25வது லீக் போட்டியில் எஃப்சி கோவா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தியது.
ஒடிசா அணி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தொடர்ந்து தவித்து வருகிறது. அந்த அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் இதுவரை வெற்றி பெறவில்லை.
கோவா அணியின் இகோர் அங்குலோ சிறப்பாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த சீசனில் இது அவர் அடிக்கும் ஆறாவது கோல் ஆகும்.
இந்தப் போட்டியில் கோவா அணி 70 சதவீதம் பந்தை தன் வசம் வைத்து இருந்தது. எனினும், அந்த அணியால் ஒடிசா அணியின் தடுப்பாட்டத்தை அத்தனை எளிதில் உடைக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தான் அந்த அணியால் கோல் அடிக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் ஒடிசா அணியின் கோல் கீப்பர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு சில கோல்களை தடுத்தார். அதன் மூலம் அந்த அணி வெறும் ஒரு கோலை மட்டும் விட்டுக் கொடுத்தது. இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.
ஆறாவது கோல் அடித்த இகோர் அங்குலோ இந்த சீசனில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஜாம்ஷெட்பூர் அணியின் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் ஐந்து கோல்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
இந்தப் போட்டியின் வெற்றி மூலம் கோவா அணி புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.