கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் முதலில் கோல் அடித்தது. போட்டி முடிய சில நிமிடங்கள் வரை ஈஸ்ட் பெங்கால் கோல் அடிக்காததால் கேரளா வெற்றி பெறும் என்றே பலரும் எண்ணினர்.
ஆனால், கடைசி நிமிடத்தில் கோல் அடித்த ஈஸ்ட் பெங்கால் போட்டியை டிரா செய்து அதிர வைத்தது.
தொடர்ந்து ஆறாவது போட்டியில் தோல்வியை தவிர்த்து வீறு நடையை தொடர்ந்தது ஈஸ்ட் பெங்கால் அணி.
இந்தப் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜோர்டான் முர்ரே 64வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன் பின் கேரளா பிளாஸ்டர்ஸ் பக்கமே போட்டி சென்றது.
ஆனால், கடைசி நிமிடங்களில் பரபரப்பாக செயல்பட்டது ஈஸ்ட் பெங்கால் அணி. ஸ்காட் நெவில் கடைசி நிமிடத்தில் தலையால் பந்தை தட்டி கோல் அடித்தார்.
ஆட்ட நேர இறுதியில் 1 - 1 என போட்டி டிராவில் முடிந்தது. கேரளா அணி இந்த டிராவை எதிர்பாராமல் அதிர்ச்சி அடைந்தது.
ஈஸ்ட் பெங்கால் அணி தற்போது 11 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் இடம் பெற்றுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் பதினோராம் இடத்தில் உள்ளது.
ஈஸ்ட் பெங்கால் அணி இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வென்றால் நான்காம் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறவும் வாய்ப்பு உள்ளது.