பெங்களூர்: ஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடரில் 2வது முறையாக சென்னையின் எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உருவாக்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து போட்டித்தொடர் 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இவ்வாண்டு அறிமுக அணியாக களமிறங்கிய பெங்களூரு எஃப்.சி அணி, முதல் தொடரிலேயே இறுதி ஆட்டம் வரை முன்னேறி அசத்தியது.
லீக் சுற்றில் முதலிடம் பிடித்த பெங்களுரு அணி, அரையிறுதியில் புனே அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியிருந்தது.
அதே நேரம் லீக் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த சென்னையின் எஃப்.சி அணி , அரையிறுதியில் கோவாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.
இவ்விரு அணிகளும் பெங்களூரிலுள்ள கண்டீரவா மைதானத்தில், இன்று பைனலில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சென்னையின் எஃப்.சி அணி 3 கோல்களும், பெங்களூரு எஃப்.சி அணி 2 கோல்களும் அடித்தன. இதனால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2வது முறையாக சென்னை ஐஎஸ்எல் கோப்பையை வென்று அசத்தியது.