காவுகாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் துணை பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் துணை பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டா இந்தியாவில் 14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளார். முன்னதாக அவர், இந்திய கால்பந்து அணியின் அன்டர்-14, அன்டர்-17, அன்டர்-19 போன்றவற்றின் துணை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பிலும் பணியாற்றியுள்ளார்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பானது பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டாவிற்கு பயிற்சியாளருக்கான 'ஏ" பிரிவு சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டா தெரிவித்துள்ளதாவது: நார்த் ஈஸ்ட் அணியின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நார்த் ஈஸ்ட் அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரிசமமாக உள்ளனர். எங்கள் அணி இந்த தொடரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்பாக விளையாடும் என்று கூறினார்.
இது குறித்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் விங்கடா கூறியதாவது: பிரான்ஸிஸ்கோ புருடோ டா கோஸ்டா இந்தியாவில் கால்பந்து நிலையை நன்கு அறிந்து கொண்டவர். இந்த ஐஎஸ்எல் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக கடின உழைப்பை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
கவுகாத்தியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.