சென்னை: ஜாகீர் முண்டம்பாரா இந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக விளையாடுவதற்காக தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார் என சென்னையின் எப்சி அணி அறிவித்துள்ளது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் (ஐஎஸ்எல்) 3-ஆவது சீசன், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கவுகாத்தியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், அட்லெடிகோ டீ கொல்கத்தா அணியை அக்.2-ந் தேதி அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
இதனிடையே ஜாகீர் முண்டம்பாரா இந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக விளையாடுவதற்காக தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார் என சென்னையின் எப்சி அணி அறிவித்துள்ளது.
மத்திய கள வீரரான ஜாகீர் முண்டம்பாரா கடந்த ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக விளையாடினார். கடந்த ஐஎஸ்எல் தொடர் அரையிறுதிப் போட்டியில் சென்னையின் எப்சி-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் ஜாகீர் முண்டம்பாரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
கடந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடருக்குப் பின்னர் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் ஐ-லீக் தொடரில் பங்கேற்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர், தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இதையடுத்து, இந்த ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்சிக்காக விளையாடுவதை நீட்டித்துள்ளார்.
இது குறித்து ஜாகீர் முண்டம்பாரா கூறியதாவது: என் மீது நம்பிக்கை வைத்துள்ள சென்னையின் எப்சி அணியின் உரிமையாளரும் பயிற்சியாளருமான மார்கோ மெட்டராஸிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐஎஸ்எல் போட்டியில் சிறப்பாக விளையாடி முடிந்த நிலையில், காயம் ஏற்பட்டது, எனது வாழ்க்கையில் கடினமான தருணம். எனினும் இந்த தடங்கள் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. சென்னையின் எப்சி மீண்டும் சாம்பியனாக என்பதற்காக முடிந்த அளவு எனது பங்களிப்பை கொடுப்பேன் என்று கூறினார்.
சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் மார்கோ மெட்டராஸி கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎஸ்எல் தொடரில் ஜாகீர் தனது திறமையை நிரூபித்துள்ளார். காயத்தில் இருந்து தற்போது அவர் மீண்டு வந்துள்ளார். இந்த தொடரில் ஜாகீர் சென்னையின் எப்சி அணிக்கு விளையாடுவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.