69வது போட்டி
ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 69வது போட்டி இன்றைய தினம் கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் முறையே 9வது மற்றும் 4வது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சிறப்பாக வழிநடத்திய கோச்
கடந்த சீசனில் இறுதி இடத்தில் இருந்த சென்னையின் எப்சி அணியை இடையில் கோச்சாக பொறுப்பேற்று இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தவர் கோச் ஓவன் கோய்ல். இந்நிலையில் அதைவிட சிறப்பான இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூரை சிறப்பாக வழிநடத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
8 போட்டிகள் உள்ளன
ப்ளே -ஆப் சுற்றிற்கு ஜாம்ஷெட்பூர் தகுதி பெற இன்னும் 8 போட்டிகள் உள்ள நிலையில், அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று தான் அறிந்துள்ளதாகவும் அதற்கு அணியின் திறமையை சிறப்பாக வெளிக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்றைய போட்டியில் வெற்றிபெறும் வகையில் அணியில் சில வீரர்களை அவர் அணியில் புகுத்தியுள்ளார்.
ஐதராபாத் கோச் உறுதி
இந்நிலையில் கடந்த 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியின் கோச் மானுவல் மார்கஸ், வெற்றிக்காக தீவிரம் காட்டும் ஜாம்ஷெட்பூருடன் மோதுவது கடினமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் முதல் 4 இடங்களுக்காக அந்த அணி சிறப்பான கோச்சுடன் தீவிரமாக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.