டெல்லி: உலகின் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.900 கோடி ஒப்பந்தம் மூலம் ஜூவன்டஸ் அணி பெற்றது. அவருடைய பெயர் பொறித்த ஜெர்சி விற்பனையில் முதல் நாளிலேயே ரூ.420 கோடி கிடைத்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் இடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரான்ஸ்பர் தற்போது நடந்து வருகிறது. ஒரு அணிக்காக விளையாடிய வீரரை மற்றொரு அணி அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றன. அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில், கிளப் அணிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து வீரர்களை வாங்கி வருகின்றன.
இந்த நிலையில், உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியைச் சேர்ந்த ஜூவன்டஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக ரூ.900 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட, 7ம் எண் கொண்ட ஜெர்சிகளை ஜூவன்டஸ் வெளியிட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் மூலம் இந்த ஜெர்சிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
முதல் நாளிலேயே, 5,20,000 ஜெர்சிகள் விற்றுள்ளன. இதன் மூலம், ஜூவன்டஸ் அணிக்கு ரூ.420 கோடி கிடைத்துள்ளது. அதாவது ரொனால்டோவுக்கு கொடுத்த பணத்தில் பாதியை அந்த அணி எடுத்துவிட்டது.
இது முதல் நாள் விற்பனைதான். ரொனால்டோ ஜெர்சி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள அடிடாஸ் ஷோரூம்கள் மூலம் 20 ஆயிரமும், ஆன்-லைன் மூலம் 5,00,000 ஜெர்சிகளும் விற்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ல், ஜூவன்டஸ் 8,50,000 ஜெர்சிகளை விற்றுள்ளன. அந்த சாதனையை அடுத்த சில நாட்களிலேயே முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.