102வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 102வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 10வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன.
தலைமை கோச் பதவி விலகல்
கடந்த போட்டியில் ஐதராபாத் எப்சி அணியுடன் மோதி 4க்கு 0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது. இதையடுத்து அந்த அணியின் தலைமை கோச் கிபு விகுணா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இவ்வாறு விலகியுள்ள 9வது கோச் இவர்.
10வது இடம்
இந்த சீசனில் அந்த அணி சொதப்பலான ஆட்டங்களையே அளித்து வருகிறது. கடந்த 18 போட்டிகளில் எதிரணிக்கு 33 கோல்களை அணி வீரர்கள் வாரி கொடுத்துள்ளனர். ஐஎஸ்எல் பட்டியலில் கீழிறிருந்து 2வது இடத்தை மட்டுமே அந்த அணியால் தற்போது பிடிக்க முடிந்துள்ளது.
சென்னையின் கோச் பெருமிதம்
இதனிடையே கடந்த நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிக்கு எதிரான போட்டியை 3க்கு 3 என்ற கோல் கணக்கில் சென்னையின்எப்சி அணி டிரா செய்துள்ளது. கடந்த 18 போட்டிகளில் 16 முறை அந்த அணி கோல்களை அடித்துள்ளது. ஆயினும் அணி குறித்து தான் பெருமை கொள்வதற்கு அதிக காரணங்கள் உள்ளதாக அணியின் கோச் சிஸாபா லாஸ்லா தெரிவித்துள்ளார்.