சென்னையின் -பெங்களூரு மோதல்
ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 16வது போட்டி நாளைய தினம் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகளுக்கிடையில் கோவாவின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
கேரளா பிளாஸ்டர்சுடன் டிரா
கடந்த ஜாம்ஷெட்பூருக்கு எதிரான போட்டியின் வெற்றியுடன் இந்த தொடரை துவக்கிய சென்னையின் எப்சி அணி, அடுத்ததாக கேரளா அணியுடனான போட்டியை டிரா செய்தது. இந்நிலையில் பெங்களூரு உடனான அடுத்த போட்டி தங்களுக்கு ஸ்பெஷல் என்றும், அதில் வெற்றி பெறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சென்னையின் அணி கோச் சிசாபா லாஸ்லோ தெரிவித்துள்ளார்.
முன்னேற சென்னையின் அணி தீவிரம்
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் மேலும் முன்னேற தங்களது அணி தீவிரமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த அணியின் எலி சபியா மற்றும் எனெஸ் சிபோவிக் போன்றவர்கள் அணியின் பலமாக பார்க்கப்படுகின்றனர்.
நிலையான ஆட்டம் -கோச்
அடுத்தடுத்த இரு போட்டிகளை டிரா செய்துள்ள பெங்களூரு எப்சி அணி வழக்கமாக கடந்த சீசன்களில் இருந்த தனது தீவிரத்தை இந்த சீசனில் குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அணி நிலையாக விளையாடி வருவதாகவும் அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணியின் தாக்குதல்களை முறியடிப்போம் என்றும் அணியின் கோச் கார்ல்ஸ் குவாட்ராட் தெரிவித்துள்ளார்.