தொடர் அஞ்சலி
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு உலக அளவில் பல்வேறு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்தனர். தொடர்ந்து அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி
இந்நிலையில் மரடோனாவின் தீவிர ரசிகரும் கால்பந்தாட்டத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி, மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக கால்பந்து பெடரேஷனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஸ்பானிஷ் லா லிகா தொடரில் விளையாடி வரும் மெஸ்ஸி மரடோனாவிற்கு மைதானத்தில் அஞ்சலி செலுத்தினார்.
முத்தங்களை பரிமாறி அஞ்சலி
ஒசாசுனாவிற்கு எதிரான பார்சிலோனா அணி மோதிய கடந்த போட்டியில் 0க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த போட்டியின் இறுதியில் தன்னுடைய அணியின் ஜெர்சியை கழற்றிய மெஸ்ஸி, உள்ளே அணிந்திருந்த மரடோனாவின் பழைய ஜெர்சியுடன் வானத்தை நோக்கி முத்தங்களை பரிமாறி மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
கால்பந்து பெடரேஷன் நடவடிக்கை
இதையடுத்து போட்டியின் நேரம் முடிவடைவதற்குள் இவ்வாறு மெஸ்ஸி நடந்து கொண்டதாகவும், விதிமுறைகளை மீறி தனது அணியின் ஜெர்சியை கீழே வீசியதாகவும் கூறி அவருக்கு 600 யூரோக்களும் அவரது அணிக்கு 180 யூரோக்களும் அபராதம் விதித்துள்ளது கால்பந்து பெடரேஷன். இதையடுத்து மெஸ்ஸியின் ரசிகர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.