கால்பந்து உலகக்கோப்பை
உலகக்கோப்பை அணிகளில் மிகவும் முக்கியமான ஒன்று அர்ஜெண்டினா. இந்த அணியின் முதுகெலும்பாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி. கடந்த 2006ம் ஆண்டு முதல் அர்ஜெண்டினா அணிக்காக கலக்கி வரும் இவர் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது ஓய்வு குறித்து மெஸ்ஸி மறைமுகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மெஸ்ஸியின் அறிவிப்பு
இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான் தன்னுடைய கடைசி உலகக்கோப்பையாக இருக்கும். நீண்ட ஆலோசனைக்கு பின் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த உலகக்கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது? எப்படி செயல்பட போகிறேன் என்ற பதற்றம் இருக்கிறது. அதற்காக காத்துக்கொண்டும் இருக்கிறேன்.
மறைமுக ஓய்வு
இது கடைசி போட்டியாக இருக்கும் எனக்கூறியிருப்பதால், உலகக்கோப்பை தொடருக்கு பின்னரும் மெஸ்ஸி விளையாடுவார். எனினும் அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளது. எனவே இந்த இடைபட்ட காலத்தில் மெஸ்ஸி ஓய்வு பெறுவார் எனத்தெரிகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
35 வயதாகும் மெஸ்ஸி இன்றும் பல இளம் வீரர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார். எனினும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெறுவது தான் அவருக்கு நல்லது. இதுவரை ஒரு உலகக்கோப்பை கூட வெல்லாத மெஸ்ஸி, இந்த முறை அர்ஜெண்டினாவுக்கு வென்றுக்கொடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.