ஜுரிச்: அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டுக்கான பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தகுதி சுற்று ஒன்றில், அர்ஜென்டினா அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரான போட்டியின்போது நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்கு தடைவிதித்தது.
இந்த தடையை எதிர்த்து பிஃபாவின் மேல்முறையீடு குழுவிடம் அர்ஜென்டினா சார்பிலும், மெஸ்சி சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மெஸ்சின் தடை உத்தரவை பிஃபா ரத்து செய்தது. மேலும் சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதத்தையும் ரத்து செய்தது.
இதனால் ஆகஸ்ட் 31-ந்தேதி உருகுவேயிற்கு எதிரான போட்டியிலும், வெனிசுலாவிற்கு எதிராக செப்டம்பர் 5-ந்தேதியிலும், பெருவிற்கு எதிராக அக்டோபர் 5-ந்தேதி நடக்கும் போட்டியிலும் மெஸ்சி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.