நம்பிக்கை நட்சத்திரம்
லியோனல் மெஸ்சி. கால்பந்தாட்ட பிரியர்களின் கனவு கண்ணன். உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அர்ஜென்டின அணியின் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமும் இவர்தான்.
திடீர் பின்னடைவு
லீக் சுற்றுகளில் மெஸ்சி தனது வழக்கமான மேஜிக் ஆட்டத்தை காண்பித்து அடுத்தடுத்து 4 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். ஆனால் நாக்-அவுட்டில் பெல்ஜியத்துக்கு எதிராகவும், அரையிறுதியில் நெதர்லாந்துக்கு எதிராகவும் மெஸ்சி மேஜிக் நிகழவில்லை. தட்டுத்தடுமாறிதான் இவ்விரு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
இறுதி போட்டியிலும் சொதப்பினால்..
இதே நிலை இறுதி போட்டியிலும் நீடித்தால் ஜெர்மனியிடம், பிரேசிலுக்கு நேர்ந்த கதிதான், அர்ஜென்டினாவுக்கும் ஏற்படும் என்று அச்சத்திலுள்ளனர் அந்த நாட்டு ரசிகர்கள். இந்நிலையில் மெஸ்சி திடீரென சுணக்கம் அடைய காரணம் என்ன என்பது பற்றி அவரின் தந்தை ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
மெஸ்சி காலி!
ஜார்ஜ் கூறுகையில், "கடந்த இரு போட்டிகளிலும் மெஸ்சி சுத்தமாக காலியாகிவிட்டார். அவரது கால்களில் தலா 100 கிலோ எடை இருப்பதை போல உணர்வதாக தெரிவித்தார்" என்றார்.
பில்லி, சூனியம், ஏவல்
திடீரென இப்படி மெஸ்சி உணர காரணம் என்ன என்பது இப்போது அர்ஜென்டினா ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அர்ஜென்டினா வெற்றி பெறுவதை தடுக்க யாராவது சூனியம் வைத்துவிட்டார்களா என்று அந்த நாட்டு மக்கள் சந்தேகத்தோடு பேசிக்கொள்கிறார்கள்.