பாரீஸில்
பாரீஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுடன், மாரடோனாவும் கலந்து கொண்டார். அப்போது மெஸ்ஸி குறித்த பேச்சு வந்தபோதுதான் இவ்வாறு கூறினார் மாரடோனா.
நல்லவர்தான்.. ஆனால் !
மெஸ்ஸி குறித்து மாரடோனா கூறுகையில், அவர் நல்லவர்தான், நல்ல திறமையான வீரர். சந்தேகமே இல்லை. ஆனால் கேரக்டர் இல்லை, ஒரு கேப்டனுக்குரிய பண்புகள் அவரிடம் இல்லை. தலைமைத்துவத்திற்குத் தேவையான விஷயங்கள் அவரிடம் இல்லை என்றார் மாரடோனா.
பீலேவும்
உடன் இருந்த பீலே அதை உடனடியாக ஆமோதித்தார். பீலே கூறுகையில், உண்மைதான். அப்போது இருந்தது போல இப்போது இல்லை. நாம் விளையாடிய காலத்தில் இருந்த நிலை இப்போது நிச்சயம் இல்லை.
தனி ஒருவனை நம்பியிராமல்
70களில் பிரேசில் அணியில் ரிவெல்லினோ, கெர்சன், டோஸ்டோவ் என பல திறமையாளர்கள் இருந்தனர். அர்ஜென்டினா மெஸ்ஸியை மட்டுமே நம்பி ஆடுகிறது. மாரடோனா சொல்வது போல மெஸ்ஸி நல்லவர்தான். ஆனால் கேப்டனுக்குரிய விஷயங்கள் அவரிடம் இல்லை என்றார் பீலே.
உண்மைதான்
இவர்கள் சொல்வதை தட்டிக் கழித்து விடவும் முடியாது. கிளப்களுக்கு விளையாடும்போது அந்நியனாக அசத்தும் மெஸ்ஸி, அர்ஜென்டினா நாட்டு அணிக்காக ஆடும்போது அம்பியாகி விடுகிறார் என்பதே வரலாறு. கிளப் அணிகளுக்கு அவர் உதவியதை விட அர்ஜென்டினாவுக்கு மிகக் குறைவான பலனே கிடைத்துள்ளது என்பதும் உண்மைதான்.
3 பெரும் தோல்விகள்
கோபா அமெரிக்கா போட்டிகளில் 2 முறை இறுதிப் போட்டிகளில் மெஸ்ஸி ஏமாற்றத்தையேக் கொடுத்தார். அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அவரால் அர்ஜென்டினாவுக்கு பலன் கிடைக்கவில்லை.
தங்கமே தங்கம்
2008 ஒலிம்பிக் போட்டியில் மெஸ்ஸி மூலம் கிடைத்த அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த தங்கப் பதக்கம் மட்டுமே மெஸ்ஸிக்கு ஒரே் ஒரு ஆறுதலாக உள்ளது.