17 ஆண்டுகளாக ஆட்டம்
கடந்த 2004 முதல் பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17வது வயதில் இருந்து விளையாடி வருகிறார் நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள லியோனல் மெஸ்ஸி. தனது 13வது வயதில் அந்த கிளப்பின் யூத் பிரிவில் இணைந்த மெஸ்ஸி கடந்த 17 ஆண்டுகளாக அணிக்காக விளையாடி வருகிறார்.
பேக்ஸ் மூலம் அறிவிப்பு
அந்த அணிக்காக அவர் இதுவரை 634 கோல்களை அவர் அடித்துள்ளார். சாம்பியன் லீக் பட்டத்தை 4 முறை வென்றுள்ளார். இந்நிலையில் தற்போது பார்சிலோனா கிளப்பிலிருந்து விலகும் அதிரடி முடிவை மெஸ்ஸி எடுத்துள்ளார். இதுகுறித்து அணியின் நிர்வாகிகளுக்கு மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் பேக்ஸ் மூலம் அறிவித்துள்ளதாக தெரிகிறது.
அடுத்த சீசன் வரையில் நீடிப்பார்
விலகல் விதியை பயன்படுத்தி மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து விலக கோரிக்கை வைத்துள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம்கடந்த ஜூன் மாதம் 10ம் தேதியே முடிவடைந்துவிட்டதாக அணி சார்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் அவர் அடுத்த ஆண்டு சீசன் வரையில் அணியில் நீடிப்பார் என்றும் பார்சிலோனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மோசமாக தோற்ற பார்சிலோனா
அவர் விலகல் முடிவில் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் 828 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டிய நிலை மெஸ்ஸிக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பார்சிலோனா அணியுடன் மெஸ்ஸிக்கு முரண்பாடு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் 2க்கு 8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனீச் அணியிடம் பார்சிலோனா படுதோல்வி அடைந்ததும் இந்த முரண்பாட்டிற்கு காரணமாக கூறப்படுகிறது.
விலகல் முடிவை தெரிவித்த மெஸ்ஸி
கடந்த 1946ல் நடைபெற்ற ஸ்பானிஷ் கிளப்பிற்கு எதிரான போட்டியில்தான் பார்சிலோனா இதுபோன்ற படுதோல்வியை அடைந்தது. இதனிடையே கடந்த வாரத்தில் பார்சிலோனா அணியின் புதிய கோச் ரொனால்ட் கோமேனை சந்தித்த மெஸ்ஸி, அப்போதே தன்னுடைய விலகல் முடிவை அவரிடம் அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அணியில் மேலும் பல வருடங்கள் மெஸ்ஸி நீடிப்பார் என்று கோமென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.