பாரிஸ் : பிரபல கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் விருது வென்று சாதனை புரிந்துள்ளார்.
மகளிர் பலோன் டி ஆர் விருதை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ வென்றார். அவர் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கலக்கலாக ஆடியவர்.
கடந்த 2015இல் தன் கடைசி பலோன் டி ஆர் விருதை வென்ற மெஸ்ஸி, தற்போது ஆறாவது முறையாக இந்த விருதை வென்று ஆறு முறை பலோன் டி ஆர் விருது வென்ற வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
அவரது போட்டி வீரராக பார்க்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட அதிக முறை பலோன் டி ஆர் வென்று சாதித்துள்ளார் மெஸ்ஸி.
இந்த விருதை வாங்கிய பின் பேசிய மெஸ்ஸி, "என் முதல் விருதை இதே பாரிஸில் வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது என் மூன்று சகோதரர்களுடன் இங்கே வந்தது இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது எனக்கு 22 வயது. அப்போது என்ன நடக்கிறது என்பதை சிந்திக்க முடியாதவனாக இருந்தேன்" என குறிப்பிட்டார்.
பலோன் டி ஆர் பட்டியலில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி முதல் இடத்தை பிடித்த நிலையில், இரண்டாம் இடத்தை லிவர்பூல் அணியின் விர்ஜில் வான் டிஜிக் பிடித்தார். ரொனால்டோ மூன்றாம் இடத்தையே பிடித்தார்.
கடந்த ஆண்டு முதல் மகளிர் பலோன் டி ஆர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமெரிக்காவின் மேகன் ரேப்பினோ பலோன் டி ஆர் விருதை வென்றார். அவரால் விருதை வாங்க நேரில் வரமுடியவில்லை.
அவர் விருது வென்றது குறித்து வீடியோவில் பேசினார். "இது மிக அற்புதமான வருடம். என் சக அணியினர், பயிற்சியாளர்கள், யுஎஸ். சாசர் பெடரேஷன் ஆகியோருக்கு பெரிய அளவில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.
அண்டர் 21 வீரர்களுக்கான சிறந்த வீரர்கள் விருதான கோபா ட்ராபியை மாத்திஜிஸ் டி லைட் வென்றார். அவர் உலகக்கோப்பை நாயகனான கைலியன் பாப்பே-வை முந்தி இந்த விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.