லண்டன்: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்ததைத் தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி கால்பந்து வீரர் ஒருவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை. அனேகமாக அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் மென்டியாக இருக்கக் கூடும் என்று இங்கிலாந்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகம் அதை உறுதிப்படுத்தவில்லை.
சம்பந்தப்பட்ட வீரர் அவராகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் வந்ததைத் தொடர்ந்து செஸெயரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்கிறார். அவரது உறவினருக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் -நிலைகுலையும் விளையாட்டு போட்டிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிப் போடப்பட்டுள்ளன. மேலும் பல போட்டிகளை இன்டோர் அரங்குகளில் நடத்தி வருகின்றனர். இங்கிலாந்து முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை தற்காலிகமாக தடை செய்வது குறித்து அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலித்து வருகிறார்.
இருப்பினும் இதுவரை எந்த முடிவையும் இங்கிலாந்து அரசு எடுக்கவில்லை. ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
கனடா பிரதமரின் மனைவிக்கும் வந்துள்ளது. நடிகர் டாம் ஹாஹ்ஸுக்கும் கொரோனா பாதிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.