மாரடோனா
அர்ஜென்டினாவில் ஏழைக் குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்து, சகதியில் கால்பந்து ஆடி பின் கால்பந்து உலகின் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக மாறியவர் டியாகோ மாரடோனா. அவரைப் பார்த்து கால்பந்து ஆடத் துவங்கியவர்கள் தான் இன்று உலகின் முன்னணி வீரர்களாக உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
அவர் 60 வயதான நிலையில் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு ரத்தசோகை, நீர் இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன் பின் அவருக்கு வேறு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது.
மோசமான பிரச்சனை
அவருக்கு மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ ரீதியாக தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் மோசமான பிரச்சனை இதுதான். மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது,
வீடு திரும்பினார்
அதன் பின் மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று வீடு திரும்பி இருக்கிறார். அதன் பின் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணம் கால்பந்து உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மூன்று நாள் துக்கம்
அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அர்ஜென்டினாவுக்கு கால்பந்து உலகக்கோப்பை வென்று தந்த நாயகன் மாரடோனாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து, அர்ஜென்டினா நாட்டில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.
ரசிகர்கள் உருக்கம்
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மாரடோனா இறப்பை அறிந்து சோகத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரடோனா மறைந்தாலும் அவரது புகழுக்கு அழிவில்லை என பலரும் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.