மரடோனா மறைவு
அர்ஜெண்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டியோகோ மரடோனா தன்னுடைய 60வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தன்னுடைய கால்பந்தாட்ட கேரியரில் பல்வேறு உயரங்களை தொட்ட, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வீரராக வலம்வந்த மரடோனா மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாரடைப்பால் உயிரிழப்பு
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து சில மணிநேரங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில் மரடோனா மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தன்னுடைய ஹீரோ தற்போது மறைந்து விட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அவருக்காகவே தான் கால்பந்தாட்டத்தை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐஎஸ்எல் அணி உரிமையாளர்
கங்குலிக்கு கால்பந்தாட்டத்தில் மிகவும் விருப்பம் உண்டு. கடந்த 2017ல் தொண்டு நிறுவனத்திற்காக கொல்கத்தாவில் மரடோனா விளையாடிய கால்பந்தாட்ட போட்டியில் சவுரவ் கங்குலியும் பங்கேற்று விளையாடினார். மேலும் ஐஎஸ்எல்லில் ஏடிகே என்ற அணியின் உரிமையாளராகவும் அவர் உள்ளார். தற்போது இந்த அணி ஏடிகே மோஹன் பகனாக மாறியுள்ளது.
மிகச்சிறந்த வீரரை இழந்துள்ளோம்
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் கால்பந்து மற்றும் விளையாட்டு உலகம் தன்னுடைய மிகச்சிறந்த வீரரை இழந்துள்ளது என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை அனைவரும் கண்டிப்பாக மிஸ் செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக், விவிஎஸ் லஷ்மன் ஆகியோரும் தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.
மரடோனா மேஜிக்
இதேபோல அனைத்திந்திய ஃபுட்பால் பெடரேஷனின் தலைவர் பிரபுல் படேலும் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். மரடோனா ஒரு மேஜிக் கலைஞரை போன்றவர் என்றும் காலருகில் இருக்கும் பந்தை கோலாக மாற்றும் வித்தை தெரிந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார். கால்பந்தாட்ட உலகில் மரடோனாவிற்கு என்று தனியிடம் எப்போதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.