கோவா : தன்னுடைய முதல் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிராக மோதிய மும்பை சிட்டி அணி தோல்வியுடன் தொடரை துவங்கியது.
ஆனால் அடுத்ததாக எப்சி கோவா அணியுடன் மோதி தன்னுடைய வெற்றிக் கணக்கை துவக்கியது.
இந்நிலையில், தன்னுடைய கோச்சிங் ஸ்டைல் மாறாது என்றும் அணிதான் தன்னை அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அணியின் கோச் செர்ஜியோ லோபரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. நார்த்ஈஸ்ட் அணிக்கு எதிராக முதல் போட்டியில் மோதிய மும்பை சிட்டி அணி தோல்வியுற்றது. ஆனால் சுதாரித்த அந்த அணி எப்சி கோவாவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றியடைந்தது. ஆயினும் அந்த அணியின் தீவிரம் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் தன்னுடைய கோச்சிங் ஸ்டைல் மற்றும் ஐடியா எப்போதும் மாறாது என்றும் அதுகுறித்து மறுப்பேச்சில்லை என்றும் தெரிவித்துள்ள செர்ஜியோ லோபரா, தன்னுடைய ஸ்டைலுக்கேற்ப அணி வீரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய பெஸ்ட்டை அணிக்கு தரவே தான் முயற்சிப்பதாகவும் புதிய ஸ்டைலை கொண்டுவர நேரம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு தற்போது நேரமில்லை என்றும் லோபரா குறிப்பிட்டுள்ளார்.