நெய்மருக்கு காயம்
கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பு உடைபட்டது. இதனால், தொடரிலிருந்து வெளியேறிய இவர், சாவ் பாலோவில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
படுதோல்வி
நெய்மர் இல்லாத நிலையில் அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதிய பிரேசில் அணி, 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை அடைந்தது. அந்த அணியின் வரலாற்றில் இதுதான் மிக மோசமான தோல்வி.
மூன்றாவது இடம் யாருக்கு?
இதையடுத்து ஜெர்மனி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. எனவே மூன்றாவது இடத்துக்கு வரும் அணியை தேர்வு செய்ய நாளை போட்டி நடைபெறுகிறது.
தலை நிமிர்வார்களா?
இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு, பிரேசிலியா நகரிலுள்ள மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நெதர்லாந்தை பிரேசில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இழந்த தோல்வியை ரசிகர்கள் மறக்க வாய்ப்பு கிடைக்கும், பிரேசில் வீரர்களும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.
கேப்டன் வருகிறார்
மஞ்சள் அட்டை பெற்றதால், அரையிறுதி போட்டியில் பங்கேற்க முடியாத பிரேசில் கேப்டன் டி.சில்வா இப்போட்டியில் களம் காண்பது அந்த அணிக்கு பலமாகும். மேலும், சோர்ந்துபோயுள்ள பிரேசில் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நெய்மரும் மைதானத்திற்கு வருகிறார். அவரை பார்த்து சக வீரர்கள் மேலும் உத்வேகத்துடன் ஆடுவார்கள் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. நெய்மரை களமிறக்குவது குறித்தும் யோசிக்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை பயிற்சியில் ஈடுபடவில்லை என்பதை வைத்து பார்க்கும்போது அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
நெய்மரின் உற்சாகம்
இதுகுறித்து பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரோட்ரிகோ பெய்வா கூறுகையில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்துடன் மோதவுள்ளோம். இப்போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு உற்சாகம் தர நெய்மர் வருகிறார் என்றார். பிரேசில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் மைதானத்துக்கும் நெய்மர் நேரில் சென்று அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மூன்றாமிடத்துக்கு பரிசு எவ்வளவு?
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய பண மதிப்பில், ரூ.210 கோடி பரிசு தொகை வழங்கப்படும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 4927 கிராம் எடை கொண்ட தங்க கோப்பையும் வழங்கப்படும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.150 கோடியும், 3வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.132 கோடியும், 4வது இடத்துக்கு ரூ.120 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும்.