கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே அஞ்சலி
அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பால் காலமானார். அவரது இழப்பிற்கு சர்வதேச அளவில் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேசிலை சேர்ந்த பீலேவும் மரடோனா மறைவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஒன்றாக விளையாடுவோம்
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்தை பதிவு செய்துள்ள பீலே, நாம் இருவரும் ஒருநாள் ஒன்றாக இணைந்து வானத்தில் புட்பால் விளையாடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் தான் மிகச்சிறந்த நண்பரை இழந்துள்ளதாகவும் புட்பால் ஜாம்பவானை உலகம் இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த நண்பர்கள்
அதிகமாக கூற விரும்பினாலும், தற்போதைக்கு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இதை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீலே மற்றும் மரடோனா இருவரும் ஒருவருக்கொருவர் மிகச்சிறந்த மரியாதையை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நண்பர்கள்
இருவருக்கும் இடையில் 20 வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தபோதிலும் இருவரும் சிறந்த நண்பர்களாக திகழ்ந்தனர். தன்னுடைய மது உள்ளிட்ட பழக்கங்களால் மரடோனாவின் புகழ் சரிந்த போதிலும் ரசிகர்கள் அவர்மீது கொண்ட அன்பு என்றுமே குறையாமல் இருந்தது அவரை அவர்கள் 'தங்க மகன்' என்று குறிப்பிட்டு மகிழ்ந்தனர்.