என்ன போட்டி?
சாம்பியன்ஸ் லீக் எனும் ஐரோப்பிய கால்பந்து தொடரின் லீக் ஒன்று இத்தாலியில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. இத்தாலியின் பெர்காமோ நகரை சேர்ந்த கால்பந்து கிளப் அணியான அட்லாண்டா அணி, ஸ்பெயினின் வாலென்சியா அணியை சந்தித்தது.
அட்லாண்டா வரலாற்றில் பெரிய போட்டி
இந்த போட்டி அட்லாண்டா அணியின் வரலாற்றில் மிகப் பெரிய போட்டியாகும். எனவே, இந்தப் போட்டியை நடத்த பெரிய மைதானம் பெர்காமோ நகரில் இல்லை என்பதால், அருகே இருந்த மிலன் நகரில் போட்டி நடைபெற்றது.
ஸ்பெயின் மக்கள்
வாலென்சியா அணி ரசிகர்கள் சுமார் 3000 பேரும் ஸ்பெயினில் இருந்து இந்தப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். பெர்காமோ நகரில் இருந்து 40,000 அட்லாண்டா அணி ரசிகர்கள் சுமார் 60 பேருந்துகளில் இந்த பெரிய போட்டியைக் காண திரண்டார்கள்.
யாருக்கும் விழிப்புணர்வு இல்லை
போட்டியை நடத்திய நிர்வாகத்துக்கோ, பங்கேற்ற அணிகளுக்கோ, போட்டியை காண திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கோ சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நம்மையும் தாக்கக் கூடும் என்ற விழிப்புணர்வு இல்லை. ஆனால், இவர்களில் யாரோ ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ அந்த வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.
ரசிகர்கள் எண்ணிக்கை
இந்த போட்டி நடந்த போது மைதானத்தில் 45,792 ரசிகர்கள் இருந்தனர். போட்டி சுவாரஸ்யமாக ஒருபுறம் நடக்க, மறுபுறம் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இடையே கொரோனா வைரஸ் பல்வேறு வழிகளில் பரவி உள்ளது. அப்போது அதை யாருமே உணரவில்லை.
இரு நாட்கள் கழித்து..
அந்தப் போட்டியில் அட்லாண்டா அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு பின் இரு நாட்களில் விபரீதம் லேசாக வெளியே தெரிந்தது. பெர்காமோ நகரில் இருந்து 60 கிலோமீட்டரில் உள்ள கொடோக்னோ நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது தான் இந்த போட்டி மூலம் ஏற்பட்ட முதல் பாதிப்பு என கருதப்படுகிறது.
பெர்காமோ நிலை
அதன் பின், லாம்பார்டி பகுதியிலும், குறிப்பாக பெர்காமோ நகரிலும் தான் கொரோனா வைரஸ் வேகமாக, அதிகமாக பரவியது. அவர்களில் சுமார் 6000 பேரை ஆய்வு செய்ததில், சுமார் 388 பேருக்கு பிப்ரவரி 19 அன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
வாலென்சியாவிலும் பரவியது
பிப்ரவரி 27 அன்று ஸ்பெயினின் வாலென்சியா நகரில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. வாலென்சியா அணியில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
ஐந்து பேர் மரணம்
மறுபுறம் அட்லாண்டா அணியில் இதுவரை ஐந்து முன்னாள் ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், அந்த அணி ஒருவர் மட்டுமே மரணித்துள்ளதாக கூறி வருகிறது. அந்த அணியின் சில வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.
இத்தாலி, ஸ்பெயின் மட்டுமல்ல..
இந்த ஒரு போட்டியால் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் சில நாட்களில் மிக வேகமாக பரவியது. சீனாவில் கிட்டத்தட்ட கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விட்ட நிலையில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் மூலம் உலகுக்கு கொரோனா வைரஸ் பரவி வந்தது.
தவறை உணர்ந்தார்களா?
இன்று குறைந்தது இத்தாலியில் 92.000 பேரும், ஸ்பெயினில் 78,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளில் மட்டும் 16,500 பேருக்கும் மேல் மரணம் அடைந்துள்ளனர். இந்த கொடிய நிகழ்வுக்கு தாங்கள் ஆடிய கால்பந்து போட்டி தான் காரணம் என்பதை அந்த அணிகள் உணர்ந்ததா? என்பது தான் தெரியவில்லை.